Sunday, May 12, 2019

வாராகி திருப்பள்ளியெழுச்சி


வாராகி திருப்பள்ளியெழுச்சி

கிழக்கு வெளுத்தது கதிரவன் எழுந்தான்
      கிளர் கொண்டைச் சேவலும் கூவிற்றுக் கேளாய்
வழக்கமாய்க் காகமும் கதிரினை நோக்கி
      வரவுகள் பாடியே மகிழ்வதைக் காணாய்
கொழித்திடும் வாரிதி அலைகளின் மடிப்பில்
      குணதிசைக் கதிரவன் கிரணங்கள் பொழிந்தான்
விழித்தெழு பூரணி வாராகித் தாயே
      விம்மிதமே பள்ளி எழுந்தரு ளாயே!                 1

அம்மையே உன்றனின் ஆலய வாசல்
      அன்பர்கள் பெருந்திறள் அடர்ந்துளர் பாராய்
தம்மரும் பசுக்களில் பாலினைக் கறக்கத்
      தகரக் குவளையுடன் சார்ந்தனர் கோனார்
செம்மையாய் வாசலில் கோலமும் போடத்
     தேன்மொழி மங்கையர் சூழ்ந்தனர் இங்கே
எம்மையும் புரப்பதற் கேற்றுள தேவி
     எம்மரசி பள்ளி எழுந்தரு ளாயே!                    2

இரவெலாம் பூசனை செய்திடும் அன்பர்
      இன்னுறக் கம்பெற இடைஞ்சல் செய்தாரோ
?
வருகெனைக் காவென இரவழைப் பேற்று
      வலிந்து நீ சென்றதால் களைப்படைந் தாயோ
?
சுருதிகள் சேர்ந்திட மேளதா ளங்கள்
      தொம்தொம்தொம் தொம்மென ஒலித்திடல் கேளாய்
வருதியெம் தாயெழில் வார்த்தாளி அம்மே
      வராகமுகி பள்ளி எழுந்தரு ளாயே!    
            3
  
கிரிச்சக் கரரதம் வாசலில் ஆணை
      கேட்டிட வந்தெதிர் பார்த்துள தம்மா
மருப்புடை கரி
, அரி புலிபரி, மகிடம்
      வாகன வரிசைகள் வாசலில் அம்மா
நிருத்தங்கள் ஆடிடும் யோகினிக் கூட்டம்
      நின்றனின் வாசலில் காத்துநிற் கின்றார்
சிரித்து நீ எழுந்திரு வாராகித் தாயே
     தெய்வதமே பள்ளி எழுந்தரு ளாயே!                4

தாமரை மொட்டுளே தங்கிய வண்டு
     தான்வெளி வந்திவண் பாடுதல் கேளாய்
மாமறை ஓதியே மறையவர் வந்தார்
    வான்தமிழ் பாடியே வந்துளார் பாணர்
நேமாய்ப் பூசனை செய்திட வேண்டி
    நிற்கிறார் பூசகர் வாயிலின் ஓரம்
தாமதம் ஏனினி
? தண்டநா தாநீ
    சத்தியமே பள்ளி எழுந்தரு ளாயே!                  5




No comments:

Post a Comment