Sunday, May 12, 2019

இவனே இவனே இராமபிரான்


ஆதி மூலம், அருள் வெள்ளம்
        அறத்தின் ஆணி, ஆலமரம்
வேத வணங்கும் மெய்ஞானம்
        வீரத் திற்கோர் மேலெல்லை
நீதி, பாடம் கற்கின்ற
        நேர்மைப் பள்ளி, குருபீடம்
ஏதி லர்க்கோர் அபயகரம்
        இவனே இவனே இராமபிரான்

தந்தை சொல்லைக் காக்கின்ற
        தர்மம் காக்கும் வைரமனம்
வந்து நின்றே அபயமெனில்
        வாழ்வளிக்கும் கருணையுளம்
இந்த மண்ணி¢ல் மனிதனென
        இறங்கி நடந்த பெருந்தெய்வம்
எந்த உயிர்க்கும் அருள்நெஞ்சம்
        இவனே இவனே இராமபிரான்

ஓர்சொல் ஓர்வில் ஓரில்லாம்'
        உயர்ந்த வாழ்க்கை ஆதாரம்
பேர்சொல் கின்ற அடியவரின்
        பிறவி போக்கும் பேரிதயம்
நேர்மை, தன்னைப் புதுப்பிக்க
        நின்றே உரசும்  புனிதமலை
ஈர்க்கும் அழகுக் கெல்லை நிலம்
      இவனே இவனே இராமபிரான்.

வான ரத்தை, வேட்டுவனை
        வல்ல ரக்கன் வீடணனை
தானி ருக்கும் நிலைக்கொப்பத்
        தம்பி யர்கள் ஆக்கியவன்
மானம் காக்கத் தீக்குள்ளே
        மனைவி தன்னை இறக்கியவன்
ஏனென் கின்ற நிலைகடந்தோன்
       இவனே இவனே இராமபிரான்


கையோ வீரம் விளைவிக்க
        கா லோ பெண்ணை உயிர்ப்பிக்க
மெய்யாம் சொல்லோ தீயர்களை
        வீழ்த்தித் தேவர் தமைக் காக்க
மையின் வண்ணன் விழிப்பார்வை
        வாரி வாரி அருள்பொழிய,
எய்த்தல் இன்றி வாழ்ந்தயிறை
        இவனே இவனே இராம பிரான்


வாழிய இராம வள்ளல்
        வாழிய இராம நாமம்
வாழிய அவன்பேர் சொல்லும்
        மன்னுயிர் அனைத்தும், என்றும்
வாழிய தெய்வ நீதி
        வாழிய எங்கள் தேசம்
வாழிய உலக மெல்லாம்
        வாழிய வாழ்க, வாழ்க!
    


No comments:

Post a Comment