Wednesday, May 22, 2019

ஓம்

சூரியனின் நாதம் ஓம்  எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள் நாஸா விஞ்ஞானிகள்.

https://www.youtube.com/watch?v=Z3hhHvHIjlU&t=29s

Monday, May 20, 2019

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பதிகம்

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பதிகம்

அரவமென ஒருபுற்றில் அம்மையே நீயிருந்(து)
    அகிலமே காக்க வந்தாய்
    ஐந்துதலை கொண்டதால் ஆணவம் தான்கொண்ட
    அயனைநீ ஆட்டி வைத்தாய்
சரஸ்வதி சாபத்தால் தன்னுரு மாறிநீ
    தரணியில் இறங்கிவந்தாய்
    தழல்மலை அருணைசேர் தடாகம் முழுகினாய்
    சாபமும் தீர்ந்ததம்மா!
அரியநின் தமையனின் ஆலோசனை  கேட்டே
    அரன்கர மண்டை யோட்டை
    அம்மையே தந்திரம் செய்துநீ வீழ்த்தினாய்
    அதைமிதித் தாழ விட்டாய்
அரியமேல் மலையனூர் அமர்ந்தருள் புரிகின்ற
    அங்காள பரமேஸ்வரி
    அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
    ஆதியே தேவி உமையே!                                1

என்னென்ன சாபங்கள் ஏற்றிங்கு வந்தனம்
     என்பதனை நாங்களறியோம்
     இறைசாபம் நீக்கிடும் அருள்ஞானம் கொண்டநீ
     எம்சாபம் நீக்க வேண்டும்
உன்னன்புக் கீடில்லை, உலகத்தைக் காத்திடும்
     உத்தமத் தேவி நீயே!
     உள்ளத்தில் ஒன்றியே உன்றனைத் தொழுதிடில்
     ஊறெலாம் போக்குகின்றாய்
முன்னென்று சொல்வதும், பின்னென்று சொல்வதும்
     முன்னரே நீகடந்தாய்
     மூலமே, இன்னருட் சீலமே, ஞாலமே
     முன்வந்து நீநடந்தாய்                                  2
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கு மாட்கொளும்
     அங்காள பரமேஸ்வரி
     அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
     ஆதியே தேவி உமையே!

சாபத்தைப் போக்குவாய் பாபத்தை நீக்குவாய்
     சந்தோஷம் நீ நல்குவாய்
     சக்தியே புற்றினுள் தங்கிடும் தேவியே
     சத்தியக் காளி அம்மா
கோபத்தைக் கொண்டநீ குழந்தைகள் எம்மீது
     கொஞ்சமும் காட்ட மாட்டாய்
     கொக்கரித் திடுந்தீய சக்திகள் தம்மையே
     குத்திக் குடல்பிளப்பாய்
நீபந்து சொந்தமென நிச்சயம் சொல்லுவோம்
      நெஞ்சிலே தாங்கி நிற்போம்
      நேரான பாதையைச் சீராகக் காட்டிநீ
      நிச்சயம் காக்க வேண்டும்
ஆபத்து நேராமல் அடியரைக் காத்திடும்
      அங்காள பரமேஸ்வரி
      அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
      ஆதியே தேவி உமையே!                              3

புற்றிலே நாகமாய்ப் போந்தனை அம்மையே
     புவியினைக் காக்க வந்தாய்
     பொல்லாத மன்னனின் புத்தியை மாற்றியே
     பூமியில் கோவில் கொண்டாய்
நற்றவம் செய்துநீ நாயகன் தன்னையிஞ்
     ஞாலத்தின் மீது கண்டாய்
     நாயகன் பசிபோக்க அன்னபூ ரணியாகி
           நல்லறம் தோற்றுவித்தாய்
பற்றியே மீனவர்  பக்தியாய் நிற்கவே
     பரிவுடன் அருள்புரிந்தாய்
    பரம்பரை யாயவர் பூசைகள் புரிகின்ற
     பாத்யதை நீ கொடுத்தாய்
அற்றதலை மேலடி வைத்தருள் செய்தனை
     அங்காள பரமேஸ்வரி
     அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
     ஆதியே தேவி உமையே!                               4

தீங்குசெய் ராக்கதன் வல்லாள கண்டனைத்
     தீர்த்திட வேண்டிவந்தாய்
     தேவிநீ முதியவள் வடிவிலே அவனது
     தேவிமுன் சென்று நின்றாய்
பாங்குடன் கர்ப்பம் தரிப்பாய்நீ ஆயினும்
     பர்த்தாவை நீயிழப்பாய்
     பத்திரம் என்றனை, ஒப்பினள் கர்ப்பமாய்ப்
     பையனை உட்சுமந்தாள்
வீங்கிருள் போதிலே இருளநீ வாவென
     வெடித்தவன் வந்து நின்றான்
     வீம்புகொள் வல்லாள் கண்டனைக் கொன்றனை
     விண்ணவர் போற்றி செய்தார்
ஆங்காரி, ரீங்காரி, ஓங்காரி அம்மையே
     அங்காள பரமேஸ்வரி
     அரனவன் துன்பத்தை அகற்றிய மாகாளி
     ஆதியே தேவி உமையே!                               5
உளமார உன்னையே ஒன்றியே எண்ணிடும்
      உயர்வான உள்ளம் வேண்டும்
      ஒருபோதும் மறவாத நினைவோடு வாழ்ந்திடும்

      உன்னதம் வேண்டும் வேண்டும்
களவான எதனையும் கருதாத நெஞ்சமும்
      கல்வியும் நல்க வேண்டும்
      கண்ணியத் தோடெவர் நெஞ்சமும் புண்படா
      கனிவான சொற்கள் வேண்டும்
தெளிவான சிந்தையும் திறமான செய்கையும்
      திடமான உளமும் வேண்டும்
      சிக்கென்று நின்னையே சிந்தையில் வைத்தனம்
      தேவியே காக்க வேண்டும்
அளவோடு நல்கினும் ஆனந்தம் கொண்டிடும்
       அங்காள பரமேஸ் வரி
       அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
       ஆதியே தேவி உமையே!                             6

கலைமகள் சாபத்தி லுருமாறி இங்கொரு
       காரணத் தால்வந்தனை
       கைலைமலை வாசிநீ காசினிக் கேவந்து
       காப்பதே உன்சிந்தனை
வலையிடைப் பட்டிங்கு வாழ்கிறோம் சிக்கலில்,
       மாதாநீ காக்க வேண்டும்
       வாராத வன்ணமே வந்தமா தேவியே
       வணங்குவோம் மீண்டு மீண்டும்.
உலவுதற் கிட்டனை உலகினில் எம்மையே
       உன்னையே நோக்குகின்றோம்
       உன்றனரு ளாலிந்த வாழ்வினில் நாள்களை
       ஓடியே போக்குகின்றோம்
அலைகின்ற மனத்தினை அடக்கியே வரமருள்
       அங்காள பரமேஸ்வரி
       அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
       ஆதியே தேவி உமையே!                             7

பாதையில் தெளிவில்லை, பயணமும் எங்ஙனம்
     பத்திர மாய்நடக்கும்
     படைத்தனை, தெளிவினைக் கொடுத்திடு பயணத்தைப்
     பத்திர மாய்ந டத்து.
நீதிநீ நீதியை நித்தம்ந டத்திடும்
     நேர்மைநீ நீதி பதிநீ
     நேர்வழி காட்டுநீ நீசமே பூட்டுநீ
      நித்தியம் நாட்டு நீயே!
சோதியே சூக்குமக் காரியே மாரியே
      சூரியே மாதேவியே
       சூலியே, நீலியே, காளியே, தோற்றமே
       சொல்லொணா மாசக்தியே
ஆதிநீ அநாதிநீ, யாதுமாய் நின்றிடும்
       அங்காள பரமேஸ்வரி
       அரனவன் துன்பத்தை அகற்றிய மாகாளி
       ஆதியே தேவி உமையே!                             8

மாசிசிவ ராத்திரிம யானக்கொள் ளைக்குநீ
       வருகின்ற போதி லுன்றன்
       வரவினைப் பார்த்தருள் பெற்றிடக் கூடுவார்
       மருள்வந்து பலராடுவார்
வீசியெறி காய்கனி விதைகளைப் பொறுக்குவார்
        வேண்டுதல் நிறைவேற்றுவார்
        வேதனை போக்கியும் சோதனை நீக்கியும்
        வேண்டும் வரம் நல்குவாய்
காசுபணம் கல்விநலம் கண்ணிய வாழ்வுநெறி
        கலங்காத் திடகாத்திரம்
        கட்டான பேறுபதி னாறுமளித் திடுகின்ற
        காளியே தாள்பணிகிறோம்
ஆசிகளைத் தந்தெமை ஆதரிக் கின்றதாய் 
        அங்காள பரமேஸ்வரி
        அரனவன் துன்பத்தை அகற்றிய மாகாளி
        ஆதியே தேவி உமையே!                                 9

கரம்நான்கு கண்மூன்று காலிரண் டோர்முகம்
        கதிரொளித் திருமகுடமும்
        கரமொன்றில் சூலமும் மறுகரம் உடுக்கையும்
        கச்சிதக் கூர்வாளொடு
விரிவான பாசமும் கொண்டுநீ தோன்றுவாய்
        வெற்றியை  நீநல்குவாய்
        மீனவர் பூசையில் தானகம் மகிழ்கின்ற
        வீரியே மாகாளியே
வரவிலும் செலவிலும் வலம்வரு வாழ்விலே
        மகிழ்ச்சியை  நல்க வேண்டும்
        மாதாநீ ஆங்காரி, ஆனாலும் மக்கள்மேல்
        மாறிடாப் பாசத்தினள்
அருள்வேண்டி அம்மையே அடிபணி கின்றனம்
        அங்காள பரமேஸ்வரி
        அரனவன் சாபத்தை அகற்றிய மாகாளி
        ஆதியே தேவி உமையே!                                 10

Saturday, May 18, 2019

தோதெ னப்பல நீகொ டுக்கவே!


தான தத்தனத் தான தத்தனத்
 தான தத்தன தான தத்தனா

 தீய தட்சனைக் கூறு பட்டிடச்
     சீறி வெட்டிய வீர பத்திரா
   தேவ கொத்தினைச் சீவி ரத்தமச்
    சேறி லெத்திடு கால நர்த்தனா
சீய பத்திரைத் தேவி சித்தமத்
    தேர்க ளத்திடை நேச முற்றவா
    தேசு மிக்கநற் சோதி மொத்தமச்
    சேர்ம கத்தெடு  தீர மிக்கவா
தாயெ னத்தனித் தூறு பத்திரச்
    சாற ளித்திடு தேவ உத்தமா
    சாக சத்தெதிர்ச் சாக சத்திறச்
      சாத னைத்திற லேறு பத்திரா
தூய பக்தியிற் றோயு முத்தமத்
    தூணெ னத் திட மான பற்றுளார்
    சோத னைப் படத் தேவை யற்றிடத்
    தோதெ னப்பல நீகொ டுக்கவே!


தேர்களம்- தேர்ந்தெடுக்கப்பட்ட களம்,
மகம்- யாகம். பத்திர காளியும் வீரபத்திரரும் யாகத்தை அழிக்கும் செயலில் ஈடுபட்டுப் பின்னர் கணவன் மனைவி ஆயினர். போர்க்களத்திில் நேசம் பிறந்தது. அதனால்தான் பத்ரகாளி சமேத வீரபத்திரர் என்கிறோம்

வண்ண வாராகி

click  vari koduppaal vaaraahi kindle book
வண்ண வாராகி
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன  தானானா

வித்தை மிகுத்திட வெற்றிகொ டுத்திடு வித்தகி வாராகி
பத்தி முகிழ்த்திட  முத்திகொ டுத்திடு  பத்திரை வாராகி
சித்திப டைத்திட வித்துவி தைத்திடு சிற்பரை வாராகி
தத்துவ  முத்திரை இத்தரை  குத்திடு  சத்தியம்  வாராகி

வீரபத்ரர் துதி

இன்று எங்களூர்(தெற்கிலந்தைக்குளம்) குலதெய்வம்(வீரபத்ரர்) கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதோ வீரபத்ரர் துதி
வீரபத்ரர் துதி
தான தத்த தத்த தான
தான தத்த தானனா
வீர முற்று வெற்றி வீர
வேட மற்ற தேவனே
வேள்வி தட்டி எற்றி வீசி
வீறெ டுத்த வீரனே,

தீர முற்றெ திர்ப்ப தேது?
தேவ ரற்று வீழவே
சீறி நட்டெ டுத்த பாத
வீறு ரைக்க லாகுமோ?
நேரெ திர்த்து நிற்கொ ணாது
நீச முற்றி ஓடியே
நீத மற்ற எத்த ரோய
நீயெ திர்த்து வீசினாய்

வேர டுத்த பக்தி கூடி
மேவு சுத்த நேயர்கள்
வீறு பற்று வெற்றி கூட
வேணு முற்ற வீரனே!
இலந்தை 17-5-2019

Tuesday, May 14, 2019

மணற்கோவில்



வைகிகியில் மணற்கோயில்

       

       காலையில் குளிப்ப தற்குக்

           கடற்கரை சென்ற போது

       பாலகன் விதாத்தைப் பார்த்துப்

            'பக்குவ மாக நீயும்

       காலிலே மணலைக் கூட்டி

            கட்டிடு வீட்டை என்றோம்

       காலனை உதைத்த அந்தக்

            கடவுளைக் கட்டி விட்டான்



      அங்கொரு வட்ட மாக

            ஆவுடை யாரைக் கட்டி

      லிங்கமும் நடுவி ருத்தி

            நேரெதிர் நந்தி வைத்தான்

      பொங்கிடும் நதிக டக்கப்

           பொருந்தவோர் பாலம் போட்டான்

      பங்கமில் கோயி  லுக்குள்

             பரமனும் இறங்கி விட்டான்

     
      கட்டிய கோயில் வந்த

            கடவுளைப் பூஜை செய்து

      கிட்டிய மலரைப் போட்டு

            கேண்மையாய்ப் பாடல் பாடி

       எட்டியே வந்தி ருக்கும்

            இறைவனைத் தியாணம் பண்ணி

       நிட்டையில் இருப்ப தைத்தான்

            நேருரக் காணு கின்றோம்
     

      பூசலார் மனத்தி நுள்ளே

            பொருந்திய கோயி லுக்குள்

      ஈசனார் வந்தி றங்கி

            இன்னருள் செய்த தைப்போல்

      நேசமாய் மணலைக் கட்டி

            நிகழ்த்திய கோயி லுக்குள்

      பூசைய ஏற்றுக் கொள்ளப்

            புண்ணியன் வந்தி ருப்பான்


       வானமே கூரை யாக

            மறிகடல் பிரண வத்தைக்

      கானமே பாட, தென்றல்

            காற்றதைச் சுமந்து சேர்க்க
  
     மேனிலை நெருப்புக் கோளம்

            விண்ணிலே தீபம்  காட்ட

       ஆனநற் பஞ்ச பூத

            ஆலயம் அரனார் கோயில்



      தினந்தினம் அழித்த ழித்துச்

            செய்திடும் அந்தி யைப்போல்

      புனைந்திடும் இந்தக் கோயில்

            பொன்றினும் பொன்றா தாகும்

      நினைந்திடும் உள்ளத் துள்ளும்

            நிழற்படத் துள்ளும் நிற்கும்

      கனிந்ததோர் அந்த நாளைக்

            கண்முனே நிறுத்தி வைக்கும்



      வாழிய மணலில் கோயில்

            வடித்தயிச் சிறுவன், நெஞ்சில்

      வாழிய கோயி லுக்குள்

             வந்தருள் செய்த தேவன்

      வாழிய ஒருமைப் பாடு

             வாழிய மனித நேயம்

      வாழிய கவிதை மாந்தி

             மகிழ்ந்திடும் அன்ப ரெல்லாம்!



               திருச்சிற்றம்பலம்!

 *  வைகிகி என்பது ஹவாய்த்தீவுகளின் தலைநகரம் ஹோனலூலுவில் உள்ள மிக அழகிய கடற்கரை

கேட்பது கிடைப்பதில்லை


கேட்பது கிடைப்பதில்லை

கேட்பது கிடைப்பதில்லை- நான்
கிடைப்பதைக் கேட்பதில்லை
கேட்பதைப் பெற வேண்டும் - கேட்டுக்
கிடைத்ததில் ஜெயம் வேண்டும்

கேட்பதுதானே என்தொழிலாம்- அதைக்
கேடறச் செய்வதோ உன்கடனாம்
கேட்பதைக் கொடு தாயே - நல்ல
கீர்த்திகள் தருவாயே

எத்தனை இடர்கள் பாதையிலே - அம்மா
எத்தனை வலைகள் வீதியிலே
பக்தனை அறிவாயே-அருள்
பாலிக்க வருவாயே

என்குறை நீயருவாய் - அதை
எண்ணியே நலம்தர நீவிரைவாய்
அன்னையே கருமாரி- எனை
ஆகொளும் அருள் மாரி

கருமாரி கும்மி

அன்னை
கருமாரி கும்மி

புனிதச் சிரிப்பு

புனிதச் சிரிப்பு

நடைபோடு தம்பி நடைபோடு


நடைபோடு தம்பி நடைபோடு

நடைபோடு தம்பி நடைபோடு- பழனி
நாதனவன் பெயரைச் சொல்லி நடைபோடு-நடைபோடு
எக்கணத்தும் எவ்விடத்ஹ்டும் எந்த வேலை செய்த போதும்
அக்கணத்தே, அவ்விடத்ஹ்டே ஆண்டிவந்து  காப்பா னென்றே - நடைபோடு

பாட்டுக்குள்ளே நாதமாக, பண்ணுக் குள்ளே கீதமாக்
ஆட்டுவிக்கும் ஆண்டி நின்றே அற்புதங்கள் செய்வான் என்றே- நடைபோடு

மொட்டை வானம், கொட்டு மேகம், பொட்டு நிலா, சுற்றுகதிர்
வெட்டு மின்னல் மொட்டு விண்மீன் வேலன் வடிவாகுமென்றே- நடைபோடு




நீலகண்டன்


நீலகண்டன்
நீனிற மாலும் தேவி
     நிமலையும் பாகம் கொண்டு
நீனிறம் ஓர்பால் தந்த
     நெறியினால் மேனி முற்றும்
நீனிறம் ஆனால் ஐயம்
     நேரலாம் என்றே நஞ்சை
மேனியில் சேரா  வண்ணம்
     மிடற்றிலே நிறுத்தினாளோ?
இலந்தை
25-10-2011

யார்?


யார்?

சின்னஞ் சிறிய எறும்புக்குக் கால்களைச்
செப்பமாய்ச் செய்து கொடுத்தவர் யார்?
சன்ன முடியினும் சன்னமாய்க் கால்களில்
சாரும் மூட் டுக்கள் படைத்ததுயார்

பின்னிடும் சின்னக் குருவிக்கவ் வித்தையைப்
பீடுறக் கற்றுக் கொடுத்தது யார்
மின்னலில் கண்ணைப் பறிக்கும் ஒளியதன்
வீச்சைத் தெளிவுற நெய்தது யார்?

அந்த இறையை வணங்குகிறேன்  - அவர்க்கு
யாதும் எளிதாகும் என்பதனால்
எந்த வரமெனக் கேட்காமலே-எனக்கு
ஏற்ற தருளிட வேண்டுகிறேன்.

அன்னை ஆடும் அரங்கு


அன்னை ஆடும் அரங்கு

தன்னுளே நிலைத்து நிற்கும்
            சத்திய ஜோதி என்னும்
மின்னலை, இறையை, வைய
            விடிவினை, ஞானம் என்னும்
கன்னலை, சக்தி தன்னைக்
            கருத்துடன் போற்று கின்ற
அன்பர்தம் உள்லம் அன்னை
            ஆடிடும் அரங்கம் ஆகும்!