Sunday, May 12, 2019

வாராகி தோடகம்


 வாராகி தோடகம்

சங்கராச்சாரியாருடைய சீடர் தோடகாச்சாரியார் ஒரு அருமையான சந்தத்தில் தோடகாஷ்டகம் எழுதினார்.  அந்தச் சந்தத்திற்கே தோடகம் என்று பெயர் வந்தது. ஒரு அடிக்கு எட்டுப் புளிமாக்களால் ஆன கண்ணிகள்.

இதோ வாராகி தோடகம்

1 அருளே பொருளே அறிவே மறையே
      அழகே அகமே அமைகின் றவளே
  அரிதென் றெதுவும் உனதா யிலையே

      திருவே னமுகி சரணம் சரணம்!

2 அறிவே னெனவே உரைசெய் வதெலாம்
       சிறிதும் அறிவே இலைநான் அறிவேன்
  வறியேன் வழிநீ எனவே நினைவேன்

       திருவே னமுகி சரணம் சரணம்!!

3 எதுநான் செயினும் அதுவுன் செயலே
     எனுமோர் மனமே தருவாய் இனிதே
  கதிவே றிலையே மதிதா நிதிதா

      திருவே னமுகி  சரணம் சரணம்!

4 கவியில் பொருளே தருவாய் வருவாய்
      கருதக் கருதும்  கணமே வருவாய்
  அவையில் உரையே அழகாய்ச் சொரிவாய்

      திருவே னமுகி சரணம் சரணம்!

 5 எளியேன் எனவே கருதி அரிதை
      விலகப் புரிதல் அழகோ அழகோ
  அளியால் அரிதை எளிதாக் கிடுநீ

      திருவே னமுகி சரணம் சரணம்!

6 நெறியில் விலகி நினைவிட் டிடினும்
      சரியில் வழியில் தடைபோட் டிடுவாய்
  பொறியில் படினும் விடுவித் திடுவாய்

      பொருவே னமுகி சரணம் சரணம்!

7 பனியோ கனலோ வெயிலோ நிழலோ
      முதலோ முடிவோ எதிலும் எதிலும்
  நினைவே நினதாய் நிகழப் புரிவாய்

      திருவே னமுகி சரணம் சரணம்!

8 எனதென் றுளவை உனதென் றறியும்
     ஒருஞா னமதை உளமே தருவாய்
  கனிவே
, கருணைக் கடலே, நிறையே
     திருவே னமுகி சரணம் சரணம்!



No comments:

Post a Comment