Friday, May 10, 2019

இரத்தினகிரி முருகன்


இரத்னகிரி முருகன்

கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி மிகக்
கோலா கலமாகக் கும்மியடி
நம்பித் திருமணிக் குன்றம் உறைந்திடும்
நாதனைப் பாடியே கும்மியடி     கும்மியடி

குன்றிருக்கும் அருள் சீலனடி- நித்தம்
        குன்றா எழில் கொண்ட கோலனடி
என்றும் நமைக்காக்கும் வேலனடி - இவன்
        இரத்ன கிரிவளர் பாலனடி        கும்மியடி

சூரப் பகையைத் தொலைத்தவண்டி- என்றும்
        தூயவர் நெஞ்சில் நிலைத்தவண்டி
நாரணற் கன்பு மருகனடி- இவன்
        நம்மைப் புரக்கும் முருகனடி       கும்மியடி

நாவிற் கசைவைக் கொடுப்பவண்டி- இவன்
        நம்மை நல் மார்க்கம் விடுப்பவண்டி
பூவை மலரப் புரிபவண்டி - இவன்
        புள்ளி மயில்மேல் வருபவண்டி     கும்மியடி

செந்தமிழ் பாடும் கவிஞனடி - இவன்
        தீங்கவி கேட்கும் சுவைஞனடி
எந்த இடத்திலும் காப்பவண்டி- ஏதும்
        இன்னல் வராமலே பார்ப்பவண்டி    கும்மியடி

சித்தர் மனத்துறை முத்தனடி- நம்
        சிந்தை கவர்ந்திடும் அத்தனடி
பத்திக் கிரங்கி வரமருள்வான் - நாம்
        பாங்குடன் வாழும் தரமருள்வான்   கும்மியடி

பால முருகனைப் போற்றுங்கடி - அவன்
        பக்கம்வந் தேகுறை சாற்றுங்கடி
நீல மயிலேறி வந்திடுவான்- என்றும்

        நிம்மதி வாழ்வினில் தந்திடுவான்!   கும்மியடி


No comments:

Post a Comment