Monday, May 13, 2019

பாடு,பாடு, பாடு


பாடு பாடு பாடு
    
பாடு பாடு பாடு
சக்தி புகழ் பாடு
ஆடி ஓடிப் பாடு தேவி
அம்மை புகழ் பாடு

கவிதையாக வருவாள்- பாடும்
    கவிஞர்க்கருள் புரிவாள்
புவியை ஓட்டிச் செல்வாள்- பக்தி
    போற்றும் நெஞ்சை வெல்வாள்     பாடு

காளியம்மை கோயில்  சென்ற
    காளிதாசன் நாவில
ஆளும் சொல்லை எழுத அவன்
    ஆற்றல் பெற்றான் பாவில்
          
அம்மா வாசை இரவு –நிலா
ஆகாயத்தில் வரவு
தம்மைப் பாடும் பட்டர்தமைத்

தாங்கிக் காத்த பரிவு


திருவானைக் கா கோயில் - தனில்
    திகழ்தாம்பூலம் வாயில்
கருத்துடனே தந்தாள்- அவன்
    காளமேகம் ஆனான்               பாடு


கூடல் வாழும் கண்ணி - அந்தக்
குருபரரை எண்ணி
மாடம் விட்டு வந்தாள் - மன்னன்
மடியின் பக்கம் நண்ணி

பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டாள்
பாரதியின் பாட்டு
ஆடு கின்றாள் அம்மைஅவள்
ஆதரிப்பாள் நம்மை

வேண்ட வேண்டத் தருவாள்அவள்
    விரைந்து காக்க வருவாள்
யாண்டும் அன்னை தோற்றம்அவள்   
     அன்பு பெற்றால் ஏற்றம்.             பாடு

No comments:

Post a Comment