Saturday, May 11, 2019

தாயே தனந்தா


தாயே தனந்தா

சமநிலைச் சிந்து

கற்பூரத் தட்டினிலே - காணிக்கைக்
காசு போடாவிடிலோ
அற்பமாய் எங்களையே - கோயில்
அர்ச்சகர் பார்க்கின்றார்

ஐம்பது காசுதந்தால் - பிச்சை
யாருக்கு வேண்டுமென்பான்
இம்மா உலகத்திலே - பணத்தின்
ஏற்றம் இமயமம்மா *

ஆனந்தக் களிப்பு

பட்டுப் புடவையும் உண்டா - ஒளி
பாய்ந்திடும் வைரப் பதக்கமும் உண்டா
கட்டிக் கிட்டென்ன நான் கண்டேன் - என்று
கட்டிய பெண்டாட்டி கத்திடு கின்றாள்

பெட்டியைப் பெண்ணும் குடைவாள் - உள்ளே
பிடித்த திலையெனில் கோபம் அடைவாள்
கட்டிப் பயல் எட்டிப் பார்ப்பான் - அட
சொல்லவே வேண்டாம் குதித்தவன் ஆர்ப்பான்.

வாய்த்த இளமையும் வாட - இளம்
மங்கை, கணவன் பெறப்பொருள் தேட
காய்த்துக் கனியாமல் சாவார் - பலர்
காசின்றி வாழ்க்கையில் பித்தாகிப் போவார்.

போதும் போதும் அம்மா தாயே - இந்தப்
பூமியில் வாழப் பொருள் தருவாயே
யாது பலன்பல கற்று - தாயே
ஆகையால் கொண்டேன் பணத்தின்மேல் பற்று ?

எழுசீர் விருத்தம்

,, மனிதா, வாடா நீ என்று ஏலாதவரும் கூறாமல்
தீயே அனையோர் வாயில் விழுமோர் தேரா நிலையே சாராமல்,
நாயேன் எனையே சேயே எனவே நீயே பரிவாய் பாராயோ ?
தாயே தனந்தா, தாயே தனந்தா, தாயே தனந்தா, தாதாதா *

செம்மா துளையே, செந்தாமரையே, தேனார் அமுதே, செந்தேனே,
இம்மா வெளியே இல்லா நிலையே, எல்லாம் உனதாய் ஈன்றhயே,
சும்மா இருந்தே தாதா எனநான் சொல்லாவிடினும் தரவேண்டும்,
அம்மா தனந்தா, அம்மா தனந்தா, அம்மா தனந்தா, தாதாதா *

No comments:

Post a Comment