Saturday, May 11, 2019

காளிகாம்பாள்


காளிகாம்பாள்

பதினான்கு சீர் விருத்தம்

உதயமிளங் காலையில் ஒளிதரும் செம்மையில்
        உன்முகம் காணுகின்றேன்
        உவகையொடு பூங்கொடி உதவுகிற பச்சையில்
        உன்னருள் பேணுகின்றேன்
நிதியமே, கருணை வளர் நிலையமே, ஜோதியே
        நிறைவுகள் பொங்குமிடமே
        நின்றாடு மீசனுடன் ஒன்றான தேவியே
        நித்தியச் சக்தி யுமையே
பதியுமொரு வேரிலே பற்றாகப் பாய்ந்தருள்
        பாலித்திடும் சக்தியே!
        பக்கமே, உச்சியே, பாதாள மே யெலாம்
        பாய்ந்தருள் ஞானவொளியே!
கதிபெற வேண்டியே துதிசெய வந்தனம்
        காத்தருள் செய்ய வேண்டும்
        கருணையொடு சென்னையில் அருளாட்சி செய்கின்ற
        காளிகாம்பாள் தேவியே!

செல்லாத சொல்லொன்றும் சொல்லாத பெற்றியும்
        சீர்த்தியும் நற்கீர்த்தியும்
        செல்கின்ற இடமெல்லாம் நல்லவன் இவனெனச்
        செம்மையாய்ப் போற்று திறமும்
இல்லாத வறியோருக் கீவதற் காகவே
        ஏராளச் செல்வங்களும்
        எடுத்துக் கொடுத்திடத் தாராள உள்ளமும்
        ஏற்றமும் சொல்லூற்றமும்
வல்லாள ராயினும் பொல்லாத பேர்களை
        வணங்காத் துணிச்சல்களும்
        மனத்திலே தூய்மையும் வாய்மையும் சொல்வாக்கு
       மாறிடாப் பக்தி நலமும்
கல்லாத நெஞ்சையும் கனிவிக்கும் கவிதையும்
        கடையேனுக் கருள் புரிகவே!
       கருணையொடு சென்னையில் அருளாட்சி செய்கின்ற
       காளிகாம்பாள் தேவியே

No comments:

Post a Comment