Saturday, May 11, 2019

சிமிழ் இராமாயணம்


சிமிழ் இராமாயணம்

 அறுசீர் விருத்தம்

கோசலை பெற்ற மைந்தன் கோமுனி கோசி கன்தன்
தாசனாய்ப் பின்னே சென்று தாடகை தன்னைக் கொன்று
தேசினைக் கால் கை  காட்டச் சீதையை மணந்த செய்தி
பேசுவார் பீடு கொள்வார், பெண்கள் மங்கலங்கள் காண்பார்

தன்முனைத் தான் சந்தித்துத் தன்சிலை தானே வாங்கித்
தன்னரும் தந்தை செய்தி தாயவள் சொல்லக்கேட்டு
தன்னவள், தம்பி பின்னே தாம்வரக் கான்சென்றான்தன்
இன்னரும் கதையைச் சொல்வார் இகபரம் இனிது காண்பார்.

வேடனைத் தம்பி ஆக்கி மேல்செலத் தன்னை அங்கும்
தேடியே வந்த தம்பி திருவடி பெற்றுப் போக
கேடுசூழ் அரக்கி மூக்குக் கிழிபடக் காட்டில் வாழ்ந்தான்
ஈடிலா வாழ்க்கை சொன்னால் எடுத்ததை முடிப்பர் திண்ணம்

கெஞ்சியே பெண்மான் பொன்மான் கேட்டிட இராமன் செல்ல
சஞ்சலப் பட்ட சீதை தம்பியைத் துரத்த , அங்கே
வஞனை வேடம் பூண்டு  வந்ததோர் இலங்கை வேந்தன்
வஞ்சியை , சீதை தன்னை மண்ணொடும் எடுத்துப் போக

பாதையை ஜடாயு என்னும் பறவையும் மறித்து வீழ்ந்த
சேதியைச் சொல்லி  விண்ணிற் சேர்ந்திட அனுமன் வந்தே
ஆதியின் முதல்வன் என்றே அன்னையை வணங்கி நின்ற
காதையைச் சொல்வார் வாழ்வில் கடவுளைக் காண்பார் உண்மை

குரக்கின வேடன் தன்னைக் கூடவே தம்பி யாக்கி
அரக்கரின் நகரை நோக்கி அனுமனை அனுப்ப, அன்னோன்
திரைகடல் தாண்டிச் சென்று தேவியைக் கண்ட செய்தி
உரைப்பவன் வாழ்வில் நல்ல உள்ளொளி பெற்று வாழ்வான்.

தாயிடம் ஆழி தந்து தருக்களை அழித்து, சேனை
மாயவே வைத்து மன்னன் மாளிகை சேர்ந்து சீதை
நாயகன் பெருமை கூறி, இலங்கை மாநகரின் மீது
தீயினை வைத்து மீண்ட செய்தியைச் சொல்வார் வெல்வார்.




சேதுவில் இராம நாமம் செப்பியே அணையைக் கட்டி
மோதிடும் வானரங்கள் முன்செல இலங்கை சேர்ந்து
தூதினை அனுப்பிப் பின்னர் தொடங்கிய போரைப் பற்றி
மீதுறச் சொல்வார் செல்வம் மேவிட இனிது வாழ்வார்

ஆர்த்திடும் அரக்கர் கூட்டம் அழிந்திடப் போர் தொடுத்துக்
கூர்த்திடும் இந்த்ர சித்தன், கும்பனை வென்று வெற்றிப்
போர்த்தொழில் இராவணன்தன் புல்லுயிர் போக வைத்த
நேர்த்தியைச் சொல்வார் வெற்றி நித்தமும் பெற்று வாழ்வார்.

தேவியின் தூய்மை காட்டத் தீயிலே குளிக்க வைத்துத்
தாவிடும் அனுமன் மூலம் தம்பிக்குச் செய்தி சொல்லி
பாவலர் பாட ராமன் பட்டாபி ஷேகம் கொண்டான்
நாவினால் சொன்னால் போதும் நமக்கினிப் பிறவி இல்லை

No comments:

Post a Comment