Monday, May 13, 2019

உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி


                   உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி 
உச்சிஷ்ட கணபதி அஷ்டோத்ர சத நாமாவளியை      அடியொற்றி எழுதப்பட்ட எண்சீர் விருத்தங்கள்.
 
அடியவருக் கெதுநன்மை அறிந்ததனை என்றும்
              அளிக்கின்ற அமரர்தரு கற்பகமே போற்றி
முடியினிலே சந்திரனைச் சூடியுள தேவன்
              முழுமுதலாம் ஈச்வரனின் உயிர்ப்புதல்வா போற்றி
படியுயர்ந்த இமயமலை அரசனது புத்ரி
              பார்வதியின் மடியமர்ந்து திகழ்பவனே போற்றி
உடன்பிறந்த முருகனுடன் ஆடவிரும் புகிற
              உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி                     1

அழகுமிகு நீலசரஸ் வதியுடைய ஈர்ப்பால்
              ஆழ்ந்துமனம் திளைத்திருக்கும் ரசிகமணி  போற்றி
எழிலுடைய   ஸ்வானந்த  பவனமெனும் உலகில்
              இருந்தருளைச் செய்கின்ற கணபதியே போற்றி
பொழிகிரண ஒளிச்சந்த்ர  மண்டலத்தில் வீற்றுப்
              புரக்கின்ற அருளுடைய பூரணனே போற்றி
ஒழுகுமொளி கற்பகத்தின் அடியினிலே தங்கும்
              உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     2

ஆகாச கங்கையிலே நடுவில்வெண் கமலம்
              அமர்ந்திருக்கும் ஒளிமிகுந்த நாயகனே போற்றி
வாகான அந்தியெழு சந்தியிலே சூர்ய
              மண்டலத்தில் அமர்ந்திருக்கும்  ஆனந்தா போற்றி
பாகான கரும்புச் சாற் றுக்கடலின் மத்தி
              பலர்போற்றித் துதிசெய்ய வதிபவனே போற்றி!
ஓகோகோ எனச்சிந்தா மணிபுரத்தில் வாழும்
              உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     3

படைக்கின்ற தொழில்முதலாய் மறைத்தல்வரை ஐந்து
              பணிகளுக்கும் காரணனாய் அமைந்தவனே போற்றி
தொடுக்கின்ற விளையாட்டாய்  புவனங்கள் மூன்றும்
              தோற்றியிங்கே ஓட்டியவா சுந்தரனே போற்றி
எடுத்திங்கே தூக்கியநின் துதிக்கையின்நீர்த் துளியால்
              இவ்வுலகை வெளிக்கொணர்ந்த உத்தமனே  போற்றி!
உடற்குள்ளே  அசையுமசை யாப்பொருளாய்த் தோன்றும்
              உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     4

அணுவுக்குள் அதைப்பிளந்த திறலாகத் தோன்றி
              அமர்பவனே மாபெரிய ஆற்றலனே போற்றி
பணிகொண்டே அனைவரையும் வசமாக்கு கின்ற
              பரிவுடைய மந்திரத்தைக் கொண்டவனே போற்றி
பிணிதம்முள் கொடியபிணி தொழுநோய்மு தற்றாய்ப்
              பிணியனைத்தும் தீர்க்கின்ற பெரியவனே போற்றி
உணராதே பகைவாதம் தம்பிக்க வைக்கும்
              உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     5

கரந்தெவரும் செய்யேவல் சூனியங்கள் எல்லாம்
             களைந்தடியார் தமைக்காக்கும் காவலனே போற்றி
ஒருமுறையே உளமார மந்திரத்தைத் தியான
             ஒழுங்கினிலே ஜபிக்கமுக்தி அருள்பவனே போற்றி
திரணமுடன் பக்தர்கட்கு விபத்துவரா வண்ணம்
             திடமாகக் காப்பதிலே ஊற்றமுளோய்  போற்றி
ஒருமனதாய்த் தியானிக்க  அமுதசுவை கொடுக்கும்
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     6

மறைமுகமாய்  ரகசியமாய்  பூசிப்போர்  கட்கு
             மனம்விழையும் அனைத்தையுமே மகிழ்ந்தளிப்போய் போற்றி!
நிறையழகுத் தோற்றத்தால்  நிர்க்குணத்தால்  மூன்றாய்
             நீளுலகம் முழுவதையும் கவர்பவனே போற்றி
முறையுடனே எட்டுவகைத் திரவியத்தால் ஹோமம்
             முழுமனத்தால் செய்கையிலே  மகிழ்பவனே போற்றி
உறுமவதா ரங்கள் பதி னாறெடுத்த  தேவா
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     7

பாரதமாக் கதையெழுதக் கொம்பொடித்த தாலே
             பவித்திரமாய் ஒருதந்தம் குறைகொண்டோய் போற்றி
நாரதமா முனிவருடன் முனிசிரேஷ்டர் பலரும்
             நாதத்தால் பரவுகிற நாயகனே போற்றி!
சாரமுள நால்வேதம் சாத்திரங்கள் எல்லாம்
             தாள்போற்றித் துதிக்கின்ற சத்தியமே போற்றி
ஓருளமாய் இராவண பா ணன்சண்டன்  துதித்த
      உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                            8

இந்திரனைத் தேவர்களின் கூட்டத்தை என்றும்
             இடரின்றிக் காத்திடவே எழுந்தவனே போற்றி
வந்தனைகொள் சப்தரிஷி மனங்களிலே மட்டும்
      வந்துகட்டுப் படுகின்ற விநாயகனே போற்றி
முந்தியொளி, சூரியனைச் சுற்றிவரும் கோள்கள்
             முறையாகப் பெறவருளும்  சோதியனே போற்றி
உந்தியெழு மதனகலை வல்லவனே போற்றி
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     9

எரிந்துவிட்ட மன்மதனை மீண்டும்உயிர்ப் பித்தே
             ஏற்றங்கள் தந்தவருள் வாரிதியே போற்றி
விரிந்தெழுந்த வன்னிமர நீழலிலே தங்கி
             வேண்டிய வரமருளும்  வித்தகனே போற்றி
தெரிந்துசெயும் சதுராவர்த்  திதர்ப்ப ணத்தில்
             சிந்தைமகிழ் கணபதியே போற்றி ஓம் போற்றி
உரிமையுடன் கைலாசம் பந்தெனவே ஆடும்
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     10

அதர்வசீ ரிஷக் காட்டில் மயிலெனவே ஆடும்
             ஆனந்த தாண்டவனே ஐங்கரனே போற்றி
விதமுயர்ந்த கல்யாணா சலமலையில் தங்கும்
             வேதாந்த வித்தகனே, விநாயகனே போற்றி
பதமுயர்ந்த ஆதூன இந்த்ராதி ஸாமப்
             பண்ணிசையில்  தொழுகைபெறும் பரமுதலே போற்றி
உதவுகிற ப்ராஹ்மிமுதல் மாத்ரூக்கள் சூழ்ந்த
      உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                            11

ஆவரணம் நான்கினிலே திசைநாய கர்கள்
             ஆயுதங்க ளுடன்தங்கப் பெற்றவனே போற்றி
மாவரிய சங்கநிதி பதும நிதி இரண்டும்
             வாயிலிலே இருபுறமும் கொண்டவனே போற்றி
மேவுமெழில்  அனந்தன் கூர்  மம்பிருத்வி மூன்றும்
      வீற்றிருக்கும் பீடமென ஆக்கியவா போற்றி
ஓவியம்போல் தீவ்ராதி யோகினி பீடங்கொள்
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     12

பீடசக்தி ஜயாதொடங்கி ஒன்பதுபே ராலே
             பெருமையுடன் வலங்கொண்ட பெரியவனே போற்றி
கூடுமைந்து ஆவரணங் கள்நடுவே தோன்றிக்
             கொலுவிருக்கும் கணபதியே கோமானே போற்றி
பாடுடைய க்ஷேத்ரபாலன் கணேசனிவர் தம்மை
             பணித்வார பாலகராய்க்  கொண்டவனே போற்றி
ஊடகமாய் பூமிரதி ரமாகௌரி சூழும்
            உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                      13

மத்தியப்ரி  யன்முதலாம் கிங்கிரர்கள் மிக்க
           மரியாதை யுடன்சூழ வதிபவனே போற்றி
சத்திதிகழ் வாணிதுர்க்கா அம்சமுள தேவி
           தன்துணையாய்க் கொண்டருளும் சத்தியமே போற்றி
பத்திநிறை வரஹஸ்தி பிசாசியெனும் பேர்கொள்
           பத்தினியை மகிழ்விக்கும் பரம்பொருளே போற்றி
உத்திநிறை எட்டெட்டு  யோகினிகள் சூழும்
           உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                       14

நவதுர்க்கை அஷ்டவசு வாகியவர் சேர்ந்து
             நமஸ்கரிக்கும் பெருமைகொண்ட நாயகனே போற்றி
பவந்தீர்க்கும் பைரவர்கள் எண்நான்கு பேர்கள்
            பணிந்திருக்கத் தலைவனெனப் பாலிப்பாய் போற்றி
நவமாக ஐராவதம் திக்கஜங்கள் சூழ
            நன்குகொலு வீற்றிருக்கும் ஞான மணி போற்றி
உவந்திங்கே மயில்சிங்கம் மூஷிகவா கனங்கொள்
            உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     15

பெருச்சாளி தனைச்சிவந்த கொடியினிலே கொண்ட
             பெரியவனே கஜானனே, பேரருளே போற்றி
கருத்தாகக் கணத்தலைவன் கும்போத ரன்கை
             கச்சிதமாய்க் திருவடிகள் வைத்துள்ளாய் போற்றி
விருப்போடு தந்துணையின் யோனிமிசை துதிக்கை
             வீற்றிருக்க வைத்திருக்கும் வித்தகனே போற்றி
உருக்கூட்டும் பேரண்டம் பெருவயிறாய்க் கொண்ட
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     16

தாம்பூலம் தரித்ததனால் சிவந்திருக்கும் உதடு
             சந்தோஷம் தனைக்காட்ட விளங்கிடுவாய் போற்றி
தாம்போற்றும் வெள்ளெருக்கு மாலையினால் கண்டம்
             தனியழகு  கொண்டிருக்கப் பொலிபவனே போற்றி
ஆம்கண்கள் சூரியனும் சந்திரனும் அக்னி
            ஆனவனும் ஆகவமை ஆண்டவனே போற்றி
ஓம்பும்நின் கடைக்கண்ணின் பார்வைநல்கும் செல்வம்
            உச்சிஷ்ட கணபதியே போற்றி 
ஓம் போற்றி !                    17                               
கதித்துவரும் மதவொழுக்கால் சிவந்திருக்கும் கண்கள்
             கனலெனவே பளபளக்கும் காருண்ய மூர்த்தி
இதமுடனே பிறைநிலவால் மத்தகமும் ஒளிர
             எழிலோடு வீற்றிருக்கும் எம்பெருமான் போற்றி
விதவிதமாய் நாகங்கள் உபவீதம் ஆரம்
             விருப்புடனே தவழ்ந்திருக்கும் மேனியனே போற்றி
உதித்துவரும் செங்கும்பம் எனத்தோன்று கின்ற
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     18

ஆடையின்றி நிர்வாண மானநிலை தன்னை
             அலங்கார மாய்க்கொண்ட அற்புதனே போற்றி
கூடுமெழில் மனைவியினை அணைத்திருப்ப தாலே
             கொஞ்சுபுள காங்கிதத்தைக் கொண்டவனே போற்றி
நாடுகிற  பாசமுடன் அங்குசம்வில் அம்பு
             நலமாகக் கைகளிலே கொண்டவனே போற்றி
ஓடுகிற மதநீரின் மணம்பரப்பு கின்ற
           உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                            19

அந்திவண்ணச் சூரியன்போல் அங்கம்சி   வந்தே
             அழகாக அமர்ந்திருக்கும் அழல்வண்ணா போற்றி
முந்துமெழில் பிரணவத்தின் வடிவாகத் தோற்றம்
             மூண்டவனே, ஆண்டவனே, முன்னவனே போற்றி
விந்தைமிக பிரம்மாதி தேவர்க்கருள் செய்ய
             வேள்வியிலே பூத்தவனே விநாயகனே போற்றி
உந்தியெழுந்தாய் தேவர் வேண்டுதலைக் கேட்டே
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     20

பிறந்தவுடன் தேவர்களின் மனக்கலக்கம் போக்கிப்
             பெருந்துயரம் தீர்த்தவனே பெருமானே போற்றி
சிறந்தரிஷி மாதங்கர் கன்னிகையை ஏற்றுத்
             திருமணம் செய்தருள்புரிந்த தெய்வதமே போற்றி
வெறிபிடித்த வித்யாவ தன.னென்னு மரக்கன்
             வேரோடு வீழ்ந்திடவே செய்தவனே போற்றி
உறவென மந்த் திரங்களெலாம் ஆராதிக் கின்ற
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     21

அறுகோணப் பீடத்தில் நடுவினிலே அமர்ந்தே
             அருளாட்சி செய்கின்ற ஆண்டவனே போற்றி
நிறைவான தொண்ணூற்று நான்குமந்த்ர வடிவாய்
             நின்றிலங்கும் தெய்வதமே, கணநாதா போற்றி
முறையான ஹூம் க3ம் க்லாம்  க்3லாம்பீஜ மாக
             முகிழ்ப்பவனே மந்திரங்கள் மூலவனே போற்றி
உறுபீஜாட் சரங்களைத்தன் உருவமெனக் கொண்ட
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     22

பாங்குடைய ஹ்ருல்லேகா ரகஸ்யமந்த் திரத்தில்
             பரிவுடனே வசிப்பவனே  யானைமுகா போற்றி
தேங்குபுகழ் ஸ்வாஹாவாம் எழுத்துகளின் கோவை
            தேர்ந்துவடி வானவனே, வானவனே போற்றி
வாங்கரிய எண்நாண்கட் சரவடிவ மாக
             வதிபவனே, மறைமுதலே மாமணியே போற்றி
ஓங்குமெந்தச் சோதனையும் செயவேண்டா மந்த்ர
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     23

தீவிரமாய் அஷ்டாங்கம் சித்திகொண்ட யோகி
                    சீர்முக்தி அடைவதற்குக் காரணனே போற்றி
மேவுப்ராணன் இந்திரியம் மனம்புத்தி தம்மை
             மேன்மையுடன் இயக்குகிற வீரியனே போற்றி
பூவலர்மூ லாதாரத் தளநாதா தேவா
             பூரணனே, புனிதமுள புண்ணியனே போற்றி
ஓர்வியப்பாய் நான்குதள பத்மத்தில் ஊன்றும்
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     24

ஆதார மூலத்தின் திரிகோணம் தன்னில்
             அமர்ந்தழகாய் ஒளிர்கின்ற ஆண்டவனே போற்றி
தோதாகச் சுஷும்னாவில் சஞ்சாரம் செய்து
             தொடர்ந்துவரும் பக்தர்களுக் கருள்பவனே போற்றி
ஆதாரங் கள்ளாறு கடக்கின்ற ஓடம்
            ஆனவனே அவைகடக்க அருளுபவா போற்றி
ஓதாம லறிஞான வாகாசச் சந்த்ர
            உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                      25

பொன்மயமாம் ஹிரண்மயபு ராம்போஜ நிலையம
             பூத்திருக்கும் தாமரையில் வீற்றிருப்பாய் போற்றி
முன்னிருக்கும் புருவமத்தி  விளங்கிடும் பூ வனத்தில்
             மொழிபாடும் குயிலாக விளங்குபவா போற்றி
தன்வயமாய் த்வாதசாந்தச் சக்கரத்தில் நின்று
             தயைபுரியும் சூரியனாய் விளங்குபவா போற்றி
உன்வயமாய்  மனோண்மணியாய் ஒளிருகின்ற தேவா
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                      26

ஆயிரமி தழ்க்கமலம் தனைமொய்க்கும் வண்டாய்
             ஆனவனே, அருள்நாதா, ஆண்டவனே போற்றி
தூயதளம் ஸஹ்ஸ்ராரம் பொழிகிற அமுதம்
             தோய்ந்து நனைகின்றவருள் சுந்தரனே போற்றி
ஏயுமிரு நாதபிந் திரண்டையும் கடந்தே
             இயங்குகிற மேன்மையனே எழிலோனே போற்றி
ஓயுமிடம் இதுவெனவே ஒடுக்கமென நிற்கும்
             உச்சிஷ்ட கணபதியே போற்றி ஓம் போற்றி!                     27

No comments:

Post a Comment