Monday, May 13, 2019

உச்சிஷ்ட கணபதி அவதாரம்


உச்சிஷ்ட கணபதி அவதாரம்    

அறம்தளர்ந்து மறமோங்கி நிற்கும் காலை
       அறம்நிறுத்த அவதாரம் நிகழ்வ துண்டு
மறம்மிகுந்தே கொடுமையதன் வடிவாய் நிற்கும்
       வன்மையுளோன் பெற்றிருக்கும் வரத்திற் கேற்ப
இறைவனறம் காப்பதற்கே இறங்கி வந்தே
        இடர்தீரத் தீமையினை ஒழித்துக் கட்டி
மறுபடியும் அறம்தழைக்கச் செய்வான் அந்த
       வகையில்தான் அவதாரம் அமைவ துண்டு                1

வித்யாவான் எனுமரக்கன் , கொடியன், தீயன்
       விரும்பியதைத் தாம்பெறவே பிரம்மா நோக்கிச்
சத்தான தவமொன்றைச் செய்தான், அந்தத்
       தவமதனின் தீவிரத்தை என்ன சொல்ல?
கொத்தாக அங்கங்கள் வெட்டிப் போட்டே
       கொடுந்தீயும் சூழ்ந்திருக்கத் தவத்தைச் செய்தான்
அத்தீயின் வெப்பத்தைத் தாங்கா ராகி
       அமரெலாம் துடித்தார்கள் அலறி னார்கள்.                 2
அவன்செய்த தவத்தினிலே மகிழ்ந்து போன
       அயனாரும் அவன்முன்னே தோன்றிச் சொன்னார்
”உவந்தேன் நான், என்னவரம் வேண்டும் கேளென்(று)
      உரைத்திடவும் அவன்வணங்கி “என்றென்றைக்கும்
எவராலும் மரணமில்லை எனும்வ ரத்தை
       எனக்களிக்க வேண்டுமென்றான், வழக்கம் போல

“தவறான வரம்கேட்டாய். நானும் கூடச்
       சாவின்றி வாழ்வதுவும் இயலா” தென்றார்                3
வரம் மறுத்த வார்த்தைகளைக் கேட்டுச் சற்றே
      மனம் ஊன்றிச் சிந்தித்தே மீண்டும் அங்கே
வரன்முறையே இல்லாத வரத்தைக் கேட்டான்
       ”வானுலகில் அமரரெலாம் சூழ்ந்தி ருக்க
ஒருவனெவன் சிறிதேனும் ஆடை யின்றி
       உற்றதுணை தனையணைத்தே உறவு கொண்டே
வருபவனோ அவனென்னை மாய்க்கக் கூடும்
       மற்றவரால் என்றனுக்கு மரண மில்லை”                  4          

”இவ்வரத்தை நல்கிடுக” என்று கேட்டான்
       ”இசைந்தேன் நான்: எனச் சொல்லிப் பிரம்மா சென்றார்
அவ்வரத்தைப் பெற்றவுடன் வித்யாவானின்
       அக்கிரமம்  தாங்கவில்லை, இந்த்ர லோகச்
செவ்விதனை அனுபவிக்க அங்குச் சென்றான்
       தேவர்களைக் குற்றேவல் கொண்டான் “நாமும்
எவ்விதத்தில் வாழ்வோமென் றெண்ணித் தேவர்
       எல்லோரும் அயனிடத்தே சென்று கேட்டார்.               5

அவன்கேட்ட வரம்கொடிதே, அந்த வண்ணம்
       யார்செய்வார், அரியிடத்தே போவோம் என்றே
உவப்பின்றி எல்லோரும் போனார், மாலும்
       உள்ளபடி இதைத் தீர்க்க இயலா தென்றார்
சிவன்பாலே நாம்சென்று கேட்போம், என்றே
       தேவரெலாம் கைலாசம் நோக்கிச் சென்றார்
சிவன்சொன்னார்” பரம்பொருள்தான் இதற்குத் தீர்வு
       செயக்கூடும், அதனாலே வேள்வி செய்க”!                 6

யாருமதன் முன்செய்தே இல்லா வண்ணம்
       அரியதொரு வேள்வியினை அமரர் செய்தார்
ஓருருவாய் கணபதிதான் வேள்வித் தீயின்
       உள்ளிருந்து வெளிப்போந்தார், அமர ரெல்லாம்
பேருருவைக் கண்டுவகை கொண்டார், பாதம்
       பிடித்தபடி தொழுதவரைத் தோத்த ரித்தார்.
சீருறவே எமைவாழச் செய்ய வேண்டும்
       தீயவனை மாய்த்திடுக “ எனக் கேட்டார்கள்.               7

அப்பொழுது வேள்வித்தீ தனிலி ருந்தே
       அழகாயோர் இளம்பெண்ணாள் எழுந்து வந்தாள்.
ஒப்பெதுவும் இலாவழகி, வாணி துர்க்கா
       உயரம்சம் ஆகவங்கே தோன்றி நின்றாள்
“இப்பொழுது நானிவளை என்றன் பெண்ணாய்
       ஏற்கின்றேன் எனமதங்க முனிவர் சொன்னார்
அப்பொழுதே கணபதியை வரனாய் ஏற்றே
       அவருக்குத் தம்பெண்ணை மணமு டித்தார்.               8

திருமணத்தின் பின்னவர்கள் தங்கு தற்குத்
       திருப்பாற்க டல்தன்னில் உலகம் ஒன்றை
உருவமைத்தார் , ஸ்வானாந்த பவனம் என்னும்
       ஒப்பற்ற அவ்வுலகில் பொன்னா லான
பெருமைமிகு மாளிகையைச் சமைத்துத் தந்தார்
      பின்னரவர் கோரிக்கை தன்னைச் சொன்னார்.             ”வருந்துவதேன்? 
வித்யாவன் தன்னை நீங்கள்
       வரவழைத்தே ஒன்றாக இருங்கள் பார்ப்போம்”             9

என்றுகண பதிசொல்ல இமையோ ரெல்லாம்
       ஈடில்லா மகிழ்வெய்தி, அரக்கன் தன்னை
“வென்றிடுவோம் வாவென்றார், அவனும் வந்தான்
       வெளிச்சமொன்று பளிச்சென்ன விழவும் தேவர்
என்னவென உணருமுன்னே, மனைவி யோடே
       இணைந்திருந்த நிலையினிலே, ஆடை யின்றி
முன்னெழுந்தே கணபதியும் அரக்கன் தன்னை
       முறியடித்தார், சிரம்வெட்டிக் கீழே போட்டார்.              10

பளிச்சென்ற வெளிச்சம்கண் தனைப்ப றிக்கப்
       பார்த்த உரு இருந்தநிலை அறியார் யாரும்
வெளிச்சத்தில் தாம்திணறி தேவ ரெல்லாம்
       விநாயகரைத் தொழுதார்கள், நாங்கள் காணும்
ஒளிச்சத்தில் வரவேண்டும் எனப்பணிந்தார்
       உச்சிஷ்ட கணபதியை அங்கே கண்டார்
களிப்பினிலே மிதந்திருந்த  தேவன் தன்னைக்
       கைதொழுது தேவரெலாம் போற்றி செய்தார்               11

“அல்ல ல்களைத் தீர்த்தவனே போற்றி போற்றி
       ஆனைமுக மானவனே போற்ரி போற்றி
எல்லாமாய் இருப்பவனே போற்றி போற்றி
       இன்பமய மானவனே போற்றி போற்றி
எல்லையிலாப் பரம்பொருளே போற்றி போற்றி
       எண்னியதைத் தருபவனே போற்றி போற்றி!”
ஒல்லைவந்து காத்தவனே போற்றி போற்றி
       உச்சிஷ்ட கணபதியே போற்றி போற்றி!                   12

ஈதில்லை, ஈதில்லை, சொல்லிச் சொல்லி
       ஈதுண்டே எனச்சொல்லும் வண்ணம் மீந்த
ஏதுண்டோ “உச்சிஷ்டம்” அதுவே ஆகும்
       எல்லைகலைக் கடந்தநிலை அதுவே ஆகும்
வாதிட்டுப் பார்ப்பதற்கு வகையே இன்றி
       வாதுகளைக் கடந்தநிலை அதுவே ஆகும்
சாதிக்க வைப்பதுவும் அதுவே ஆகும்
       சாதனையாய் அமைவதுவும் அதுவே ஆகும்.              13

மூலாதா ரக்கனலை மூட்டி விட்டே
       முறையாக வழிகாட்டி மேலெ ழுப்பிக்
கோலாக லத்துக்கே கூட்டிச் சென்று
       குண்டலினிப் பாதையிலே கூட்டி வைத்து
ஏலாத வெனவெண்ணும் இரக சியத்தில்
       எல்லைக்கும் அப்பாலே கூட்டிச் சென்று
சாலோக மெலாம்கடந்து  சாயுஜ் யத்தைத்
       தருகின்ற தெய்வதமே போற்றி போற்றி!                   14

---------------------------------------------------------------------------------------------------------





No comments:

Post a Comment