அபயம் அளிக்கும் அன்னை
அபிராமி
நெஞ்சறிவுறுத்தல்
நிலைமண்டில ஆசிரியப்பா
நெஞ்சே உனக்கேன் நிம்மதி
இல்லை
பஞ்சைப் போலப் பறப்பதும்
ஏனோ?
வாவா என்றே வரவேற் கின்ற
மூவா முதல்வி முன்னிற் கையிலே
நெஞ்சே, உனக்கேன் நிம்மதி இல்லை
பஞ்சைப் போலப் பறப்பதும்
ஏனோ?
உன்றன் பீடத்து ஒளியை விடுத்துச்
சென்றுசென் றெங்கோ தேடு
கின்றாயே,
ஊஞ்சல் தன்னை உடனே நிறுத்து
நோஞ்சானாநீ, நோய்கொண்டவனா?
தாய்முன் சேயா சஞ்சலப் படுவது?
தூய்மை இருந்தால் துயரம்
ஏது?
பார்பார் உன்முன் பளிச்செனத்
தெரிவது
யார் யார் ? இன்னுமா அறியவில்லை நீ?
அன்னை மிகமிக அருகில் இருக்கிறாள்
மின்னும் முடிமுதல் மென்மை
அடிவரை
என்னே நேர்த்தி, என்னே அழகு!
தின்னும் அழகைத் தெரிசிக்கலாமே!
முடிமுதல் அடிவரை....
நேரிசை ஆசிரியப்பா
காரலை மேகம் கடைந்த கூந்தல்,
சூரிய காந்தி சுடர்விடு
நெற்றி,
விடியல் போதில் விளையும்
செம்மை
வடிவம் கொண்ட மாணிக்கப்
பொட்டு,
வான விளிம்பில்
வனைந்த புருவம்
ஞானப் பார்வை நல்கும் நுதல்விழி
தண்ணொளி சிந்தும் கண்களிரண்டு
பண்கள் கேட்டுப் பழகிய காது
மண்டலம் குண்டலம் வயிரத்
தூக்கு
அண்ட கோளம் அரைவடி வாகி
பொன்னின் மஞ்சள் பூசிய கன்னம்
மின்னல் துண்டில் விளைந்த
மூக்கு
பவளக் கொடியில் பழுத்த செவ்வாய்
தவழும் முறுவல் தங்கும்
இதழ்கள்
சங்குக் கழுத்து, தரள முத்தாரம்
தங்க மூங்கில் சமைத்த தோள்கள்
பொங்கும் கொங்கை, பூசிய சாந்தம்,
அங்குச பாசம், அழகிய கைகள்
கங்கண மாகக் காசினி வட்டம்
அங்கை செம்மை ஆளும் ரேகை
துரும்பின் உள்ளும் துள்ளும்
சக்தி
கரும்பு வில்லோ கையின் நேர்த்தி
மென்தளிர் விரல்கள், வேத மோதிரம்
வன்னக் கடம்பின் மணங்கொள்
மாலை
அண்டம் அடக்கிய அற்புத வயிறு
கொண்டு சுழித்த கொப்பூழ்
கமலம்
தேகம் புதுக்கும் செம்பட்
டாடை
பாகச் சுமையின் பாரம் அழுத்தும்
மெல்லிய நுண்ணிடை, இரத்தின மேகலை
சொல்ல முடியாச் சுந்தர மேடை
உருவில் அழகாய் ஒளிர்தரு
கால்கள்
நாதம் சிலம்பும் நவமணிச்
சிலம்பு
வேத முடியில் விளங்கிடு
பாதம்
திருவும் கலையும் திகழ்ந்திடு
பாதம்
பரிவு காட்டிப் பயன்தரு
பாதம்
சிரங்கள் பட்டுச் சிவந்திடு
பாதம்
போதம் அளிக்கும் புண்ணியப்
பாதம்
போதின் மென்மை பூத்திடு
பாதம்
புன்மை போக்கும் புனிதப்
பாதம்
ஒன்றும் ஒளியாய் உயர்ந்திடு
பாதம்
சரணம் சரணம் சார்ந்திடு
பாதம்
மரணம் பிறவி மாய்த்திடு
பாதம்
யாதும் ஆன அம்மையின் பாதம்
ஏதும் இணைசொல இயலாப் பாதம்
அந்தத் திருவை அறிந்திடு
நெஞ்சே,
எந்தத் துயரும் இல்லா தோடும்
திருக்கடை யூரில் திகழ்ந்திடு
தேவி
கருக்கடையூரின் கதவம் அடைத்தே
நில்லாப் பிறவி நிறுத்துவாள்
சொல்வது உறுதி, தொழுதெழு மனமே!
No comments:
Post a Comment