Saturday, May 11, 2019

ஹயக்ரீவர் காவடிச் சிந்து


ஹயக்ரீவர் காவடிச் சிந்து

ஞானமெனும் அருள் போதம் - மிக
        நல்கிடும் நாயகன் பாதம்- உயர்
நலமேதரும் ஹயக்ரீவரின் அருள்நாடிடின் பெறுவார் நிதம்
        நன்மை எனும் தன்மை

லக்ஷ்மி ஹயக்ரீவர் போற்றி - அவர்
        நாமமே என்றென்றும் சாற்றி - புகழ்
இசைபாடிடும் அடியார்தினம் வளமோடுயர் பொருள்யாவையும்
        பெறுவார் நலம் உறுவார்

செல்வத் திருமகளோடு - அருள்
        சேர்ப்பவரின் பதம் நாடு. - மிகத்
தெளிவானதோர் ஒளியாவையும் அறிவாகவே உனைமேவிடச்
        செய்வார் நலம் பெய்வார்

நெஞ்சில் நினைந்திடில் போதும்- ஒளி
        நேராகவே உளம் மோதும் - அந்த
நிலையானவர் அருள்நாயகர் துயரேயினி இலையேயெனச்
        சொல்வார் நமை வெல்வார்

கானக் குதிரை முகத்தார் - அவர்
        ஞானியர் பக்தி அகத்தார் - ஒரு
நடுநாயகம் எனவேதெரி வகையே நமை உயர்ந்தோங்கிடப்
        புரிவார் வளம் சொரிவார்

No comments:

Post a Comment