உயர , உயர..
பறவையே, வானத்தின் உறவையே நாடியே
பறக்கின்ற எழிலூர்தியே
பரவிய வான்வெளி விரிவதன் வீச்சிலே
பயணங்கள் செய்நேர்த்தியே
குறியையும் மண்ணிலே உறுதியாய் நாட்டியே
கொண்டாட்டம் கொள்ளுகின்றாய்
குத்திய பார்வையில் கொத்திய இரையினைக்
கும்பியில் தள்ளுகின்றாய்
குறைபடும் வாழ்விலே சிறைபடும் நானிங்கு
குந்தியே மேல்பார்க்கிறேன்
கும்பிக்கு வேண்டியே தம்பிக்கும் போட்டியில்
கூத்தாடி நான்வாழ்கிறேன்
அறிவெனும் தறியிலே அடிபடும் நானிங்கே
ஆகாயம் காண வேண்டும்
ஆகாய ஊர்தியே, வாகாகவே வேயெனை
ஆற்றுப்படுத்துவாயே!
எல்லைகள் உனக்கெதும் தொல்லைகள் இல்லையே
இடம்மாறிச் செல்லுகின்றாய்
இத்தேசம் அத்தேசம் என்கின்ற தடைகளை
எளிதிலே வெல்லுகின்றாய்
வல்லைநீ, உன்னைநான் வாழ்த்துவேன் வாயுவின்
மாசக்தி பெற்றுளாய்நீ
வான்வெளி நீச்சலும் மாகடல் பாய்ச்சலும்
வகையுடன் கற்றுளாய்நீ
நல்லைநீ ஆகிட நானுமோர் வாய்ப்பினை
நல்குவேன் உன்றனக்கு,
நாளெலாம் தரையிலே வாளா யிருக்கின்ற
நானுனை வேண்டுகின்றேன்
ஒல்லையிவ் வான்வெளி உயரப் பறந்திந்த
உலகினைப் பார்க்க வேண்டும்
உத்திநீ என்றனின் புத்தியில் சேர்த்தருள்
ஒருகோடி வந்தனங்கள்!
மண்ணிலே வந்ததும் எண்ணியே நாட்களை
வாளாக் கழிப்பதற்கா?
வாதுக்கும் வம்புக்கும் வாய்க்கத்தி வீச்சுக்கும்
மாறியே வேர்ப்பதற்கா?
எத்தனை ஆசைகொண்டேன்
ஏறியே ஏறியே ஏறியே செல்கிறேன்
எதுவழி தோன்றவில்லை.
கண்ணிலே காண்கிறேன் வண்ணங்கள் ஆயிரம்
கவர்ச்சியில் மயங்கிவிட்டேன்
காதங்கள் ஒருநூறு கால்களில் சேர்த்திடும்
கடமையில் தயங்கிவிட்டேன்
விண்ணிலே காண்கின்ற நட்சத்திரங்களை
வேடிக்கை பார்க்க வேண்டும்
மேகத்தின் மேலேயும் உயரங்கள் காண்கின்ற
வித்தகம் சேர்க்க வேண்டும்
உள்ளமே, உணர்வுகள் வெள்ளமே, நீயினும்
உயரங்கள் காணவேண்டும்
உன்னையே எண்ணிடும் உன்மத்தம் நீங்கிடும்
உன்னதம் பேணவேண்டும்
அள்ளிடும் கவிதையில் ஆனந்தம் ஆனந்தம்
அடுத்தடுத்(து) உயரவேண்டும்.
அதனையும் கொள்பவர் எதனையும் விஞ்சிடும்
ஆனந்தம் கொள்ளவேண்டும்
எள்ளலும் போற்றுதல் விள்ளலும் ஒன்றென
இதமுடன் ஏற்கவேண்டும்
இதனையே உயரத்தின் உயரமாய் எண்ணுவேன்
ஈடிதற் கில்லை யென்பேன்!
தெள்ளரும் செந்தமிழ்ச் செல்வியே, தெய்வமே
தேனிசைக் கலைவாணியே,
தீர்க்கமாய் ஓர்மொழி சொல்லுக ‘வெல்கநீ
வெல்கநீ, வெல்க' வென்றே!
ஆதார முலத்தில் அடங்கிக் கிடக்கின்ற
அரவமே கண்விழிப்பாய்
அடுத்தடுத்(து) உயருவாய் அமுதமே பெய்குவாய்
அங்கங்கு நீநடிப்பாய்
காதோரம் ஓரொலி கணகண என்றிடும்
கண்களில் வண்ணமூட்டம்
கறங்கிடும் வளையங்கள் கழன்றிடும் நினைவுகள்
கட்டிலே மனத்தினோட்டம்
எட்டியே பார்த்ததுண்டு
இன்பத்தின் எல்லைக்கே ஏதோவோர் கவிதையும்
இழுத்துவந் தார்த்ததுண்டு
ஓதாமல் உணராமல் ஒழுகாமல் இதுவரை
ஒருவாறிங்(கு) ஓட்டிவிட்டேன்
ஒன்றையும் கருதாமல் தெய்வமே, ஆதாரம்
உயரவே செய்தருளுவாய்!
No comments:
Post a Comment