Saturday, May 11, 2019

புன்னகை செய் போதும்


புன்னகைசெய் போதும்.
சமநிலைச் சிந்து
மதலைப்  பருவத்திலே - அம்மா உன்றன்
       
வாழ்த்தினைப் பெற்றிருந்தேன்
குதலை மொழியினிலே- உன்றன்பேர்
       
கூப்பிடக் கற்றிருந்தேன்
கொஞ்சம் வளர்ந்தவுடன்- உனக்குநான்
       
கும்பிடு போட்டுவந்தேன்
தஞ்சம் அடைந்தவுடன்-  உன்னருள்
       
தந்தெனைக் காத்துவந்தாய்
சற்றும் தயங்காமல்- எனக்கெழும்
       
சந்தேகம் தீர்த்துவந்தாய்
கற்றிடும் முன்னரதை என்னுள்ளே
       
காட்டி மகிழ்வுதந்தாய்
 தனயன் தனில்மேலாய்-  என்னைத்
       
தாங்கிப் புரந்தனைநீ
எனக்கும் உனக்குமுள -உறவை
       
எப்படிச் சொல்லுவது?
எனக்கு வயதானால்- என்ன
       
என்றும்நீ தாயல்லவோ?
கனக்கும் மறதியினைப் -போக்கிக்
       
காத்திட வேண்டுமம்மா?
உள்ளே ஒளிவீசி- -ஞானத்து
       
உள்ள நிலைபேசி
வெள்ளமெனக் கருணை -தந்தே
       
வீறுகொளச் செய்வாய்

 எத்தனை தூரம்வரை -பாதை
       
ஏகிடும் நானறியேன்
புத்தகி, நாமகளே - சற்றே
       
புன்னகை செய்போதும்


No comments:

Post a Comment