Saturday, May 11, 2019

வியப்பு


வியப்பு

இந்தச் சிறிய எறும்பின் கால்
       எப்படித்தான் அசைகிறது?
இந்தச் சிறிய காலுக்குள்
       இயங்கும் மூட்டை வைத்தவர் யார்?
எந்த உராய்வும் இல்லாமல்
       இயங்க என்ன பசைவைத்தார்?
அந்தத் திறமை எண்ணுகிறேன்
       ஆகா அதுவோர் அற்புதமே!

இன்னும் கொஞ்சம் தூரம்தான்
       என்னத் தெரியா அடிவானம்
தன்னை நெருங்க ஒட்டாமல்
       தள்ளிப் போதல் ஒருவியப்பு
மின்னல் வியப்பு, மின்னலதன்
       வேகம் வியப்பு, வீட்டிலுள
தென்னை வியப்பு, தேன்கூட்டும்
       தேனீ வியப்பு, தேன் வியப்பு

அருவி வியப்பு, வானத்தின்
அகண்டம் வியப்பு, நெல்கொறிக்கும்
குருவி வியப்பு, மழைகொட்டும்
       கொண்டல் வியப்பு, கானத்தின்
சுருதி வியப்பு, நெருப்பதனின்
       ஜோதி  வியப்பு, நெஞ்சத்தில்
கருதும் எண்ணம் கற்பனைகள்
       கனவு யாவும் வியப்புத்தான்

திணித்து வைக்கும் உணவதனைச்
       செரித்து, தன்னைத் தின்னாத
குணத்தைக் கொண்ட நம்முடைய
       கும்பி வியப்பு, இன்னதெனக்
கணித்துச் சொல்ல முடியாத
       காலம் வியப்பு, கண்வியப்பு
மணத்தை மறைத்து மலருகையில்
       வழங்கும் மல்லி கைவியப்பு.

எண்ணிப் பார்க்க முடியாத
       இடத்தில் இருக்கும் விண்மீன்கள்
கண்சிமிட்டும் ஒளிமுன்னோர்
       காலத் திருந்த ஒளியாகும்
அண்ட வெளிக்கு வெளியில்லை
       ஆண்டவன்தான் இவ்வுலகில்
கொண்டு கொட்டி வத்துள்ள
       கோலங்கட்கோ முடிவில்லை

உயிர ணுக்குள் பரம்பரையின்
       உருவ மைப்பைப் பதித்தவர்யார்
வியன்ப ரப்பு வானத்தின்
       வெளியில் அண்டம் விதைத்தவர்யார்
நியதி யோடே கோள்களையோர்
       நெறியில் சுற்ற வைத்தவர்யார்?
அயன்ப டைப்பில் ஒவ்வொன்றும்
       அற்புதத்தின் எல்லைநிலம்!

No comments:

Post a Comment