திருக்கயிலாயப்
பதிற்றந்தாதி
நேரிசை வெண்பா
கண்டேன் கயிலைமலை, கண்டவுடன் ஆனந்தம்
கொண்டேன், உளத்திலெங்கும் கும்மாளம் - அண்டமெலாம்
ஆட்டத்தில் ஓட்டும் அகிலாண்ட நாயகனின்
தோட்டத்தில் நானோர் துளி
துளியேனும் மானசத்தின் தூநீரை உண்டால்
ஒளியேறும் , தீவினைகள் ஓடும் - தெளிவாகச்
சிந்திப்ப தெல்லாம் சிறப்பாம், சிவன்பாதம்
வந்திப்ப தொன்றே வகை
வகையறியேன், வாழும் வழியறியேன், நல்ல
தகையறியேன், என்தலைவா, என்னை - மிகையாக
வாழட்டும் என்றா வரவழைத்தாய்?, நின்னருளால்
சூழட்டும் ஞானச் சுடர்
சுடர்வெண்மைத் தூமணியே, தோன்றும் கயிலை
இடம்கொண்டு வாழும் இறையே- படங்கொண்ட
பாம்பணியும் தேவா, பராபரனே, உன்பதமே
நாம்புணையாக் கொண்டோம் நலம்
நலமாக உன்முகங்கள் நாற்புறமும் காணா
நிலைவைத்தாய் ஈதென்ன நீதி?- வலமாக
வாராத போதும் மகாதேவா, உன்தோற்றம்
தாராயோ நீவந்து தான்.
தானே தயையாலே தங்கும் சிறுகுன்றாய்,
நானே மகிழவந்தாய் நாயகனே!- வானேயிவ்
வையத் திறங்கியே வந்ததுவோ, வாக்கினிலே
ஐயனே நிற்பாய் அமர்ந்து.
அமரர் துயர்தீர ஆலாலம் உண்டாய்,
இமயக் கயிலை இறையே- தமிழில்
கவிதை உயிர்பெறவே காட்டிடுவாய், உண்டோ
புவியிலே வேறு புகல்
புகல்வதெலாம் உன்றன் புகழ்பாட வேண்டும்,
நிகழ்வதெலாம் உன்றன் நெறியே - திகழ்கின்ற
அஞ்செழுத்து மந்திரத்தை ஆரா தனை செய்யும்
நெஞ்சினுக் கேது நிகர்?
நிகரிலை என்றே நினதுமலை பேர்க்கும்
அகமுனைப் புற்ற அரக்கன் - பகபகெனக்
கர்ச்சித்தான் தன்னுடைய கைநைந்து போனதனால்,
அர்ச்சித்தான் பாட்டால் அவன்.
அவனியென்ன, பேரண்டம் அத்தனையும் உன்றன்
உவகையிலே தானொழுங்காய் ஓடும் - கவிதைகளில்
பண்ணாரக் கொஞ்சும் பரமா, மனம்நிறைந்தேன்
கண்ணார நானுன்னைக் கண்டு.
No comments:
Post a Comment