Sunday, May 12, 2019

வாராகி இரட்டைமணிச் சிந்து


வாராகி  இரட்டைமணிச்  சிந்து
காப்பு
 வாராகி இரட்டை மணிச்சிந்து
               வாகாக  நானும் பாடிடவே
காரானை வேழ முகத்தவனே
                காப்பா ய் நீயும் அமைவாயே
 
நூல்
 இருசீரிரட்டை  சமநிலைச் சிந்து

அன்பு மனத்தவளே – வாராகி
        ஆளும்  இனத்தவளே
இன்பம் எலாந்தருவாய் – வாராகி
        என்றனைக் காத்திடுவாய்.                              1                                                                                                                                
ஆனந்தக் களிப்பு
 காக்கும் கருணைவா ராகி – அம்மா
        கைமேல் பலன்தரும் அன்புப் ரவாகி
வாக்கில் உயிர்கொடு தாயே – நீ
        வள்ளல் அறிவேன் வரமருள் வாயே!                  2                                    
 முச்சீரிரட்டை சமநிலைச் சிந்து
 வாயால் உனைப்பாட வேண்டும் – குரல்
        வாகாக நீதரல் வேண்டும்
தாயாய்ப் பரிந்திட வேண்டும் – பெருஞ்
        சாதனை நான்செய வேண்டும்                 
        3
ஆனந்தக் களிப்பு
 வேண்டும்வேண் டும்வேண் டும் அம்மா – பெரும்
        வெற்றிமேல் வெற்றிமேல் வெற்றியே வேண்டும்
யாண்டும் உன தரு ளாலே – பெரும்
        ஆக்கங்கள் காணுவேன் நானும் மேன்மேலே!           4
 நாற்சீரிரட்டை சமநிலைச் சிந்து
 மேலே நிலைத்திட வேண்டிய சிந்தை – இன்றோ
        வீணாய் அலைகிற பொய்மனக் கந்தை
ஆலாய்ப் பறந்தே அடிக்கிறோம் பந்தை- இந்த
        ஆட்ட  த்தில்  எத்தனை எத்தனை நிந்தை               5                              


 ஆனந்தக் களிப்பு    
 நிந்தைகள் பட்டது போதும் -  எந்த
        நேரத்தும் நீக்கிடு பொய்மையும்  சூதும்
சிந்தையை நீ தெளிவாக்கு  - என்னுள்
        சேர்த்திடு தெய்வத நன்னெறி நோக்கு                   6
 ஐஞ்சீரிரட்டை  சமநிலைச் சிந்து

நோக்கம் சுயநல மின்றிப் பொதுநலம் பேணிடவும் – ஏதும்
        நொம்பலம் இன்றியே  என்றனின் கொள்கைகள் ஊன்றிடவும்
வாக்கு  கொடுத்திடு வாராகி தேவியே மாமணியே – தினம்
        வாழ்ந்திடும் வாழ்க்கை அர்த்தம் உளதென்று மாண்புறவே!7
 ஆனந்தக் களிப்பு
 மாண்பில் உயர்ந்திடும் தேவி – நீதான்
        வாழ்க்கைக் கடிகாரம் ஓடிடச் சாவி
நாண்தானே  வில்லுக்கு உத்தி – அந்த
        நாணெனத் தந்திடென் சொல்லுக்குச் சக்தி               8
 எழுசீரிரட்டை சமநிலைச் சிந்து

சக்தி மிகுந்திடும் சக்தியே  ஸ்ரீபுரம் சார்ந்து வதிந்திடும் தேவியே – பெரும்
        தண்டனை ஈபவள் ஆகினும்  பத்தரைத் தாங்கிப் புரந்திடும் நாயகி

யுக்தி  மிகுந்திட யுத்த களத்திலே ஓங்கி அடிக்கும் தளபதி – உனை
        உள்ளத் திருத்திப் பணிகிறோம் உன்பதம் இன்றி இலையெமக் கோர்கதி! 
9            
 ஆனந்தக் களிப்பு
 ஓர்கதி யாகிடும் தாயே – என்றும்
         உன்னை நினைக்கும் நெறியருள் வாயே
தேர்ந்தனை என்றனை நீயே – என்ன
        செய்வதற் கென்றுன்றன் வாய்திறப் பாயே!          10
   அறுசீரிரட்டை சமநிலைச் சிந்து
 திறந்தால் கதவை வெளிச்சம் தேடி அகத்தில் நுழையும் – அதுபோல்
        திறந்த மனத்தால் தொழுதால் இறைவி மனமும் மகிழும்
அறிந்து சிரத்தை யுடனே அவளைத் தொழுகிற போது – தேவி
        அருளைத் தருவாள் பொருளைத் தருவாள் இதுவோ தப்பாது11                                                
 ஆனந்தக் களிப்பு
 தப்பா சரியாவென் றேதும் – நானும்
        தன்னால் அறியாமல் ஏதுசெய் போதும்
அப்போ பிழைகரு தாது – நீயும்
        அன்பாய்ப் பரிவுகொள் தாயே என்மீது
             12                       
ஐஞ்சீரிரட்டை  சமநிலைச் சிந்து
என்மீது கோபம் கொள்ள எத்தனையோ உண்டு -எனில்
        என்தமிழ் மீது மிக்க ஆர்வத்தைக் கொண்டு
உன்னையே பாடவைத்தே என்பழி தீர்ப்பாய் – இதுபோல்
        ஊருலகி லுண்டோ சொல்
? செய்தனைநல் வார்ப்பாய்  13
ஆனந்தக் களிப்பு
 வார்த்தாளி வாராகி தேவி – தேக
        வன்மைதா நீயுமுன் கையாலே நீவி
பார்த்தாலே போதுமப்போது – பண்டைப்
        பாவமும் நீங்குமுன் பார்வைக் கொப்பேது
?           14
 நாற்சீரிரட்டை சமநிலைச் சிந்து
 ஏதுள்ள தென்றென்றும் எண்ணி யெண்ணியே- காலம்
        ஏகம் கழிகிறது வாதம் பண்ணியே
யாதுள்ள தென்றெண்ண யாதவசியம்
?- அம்மா
        ஆக்கம் பெறத்தருவாள் நல்ல வசியம்         
       15
 ஆனந்தக் களிப்பு
 நல்ல வசியமே தேவை – உன்றன்
        நல்லருளால் நீ இயக்கிடென் நாவை
சொல்லைக் கடந்ததோர் சோதி – உன்றன்
        சொற்கள் தானே எங்கள் வாழ்க்கைக்கு நீதி             16
முச்சீரிரட்டை சமநிலைச் சிந்து
 நீதி அளிக்கின்ற வன்மை – நல்ல
        நேசம் கொடுக்கின்ற தன்மை
யாதும் வரமாகும் நன்மை – அவள்
        ஆங்காரி ஆயினும் மென்மை.                          17
 ஆனந்தக் களிப்பு
 மையமாய் உன்றனைச்  சுற்றி – அன்று
        வானவர்  போரிட்டார் கிட்டிற்ரு வெற்றி
வையகம் வாழவைப் பாயே – உன்றன்
        வாழ்த்தால் அமைதி நிலவட்டும் தாயே!                18
இருசீரிரட்டை சமநிலைச் சிந்து
 தாயே வராகமுகி – லலிதை
        சைனியச் சேனாபதி
நாயேன் பிழைபொறுத்தே – எனக்கு
        நல்குவாய் நல்லகதி                           
        19

ஆனந்தக் களிப்பு
 நல்ல கதியென்றால் முக்தி – அந்த
        ஞானத்தை நோக்கி நீ தந்திடு சித்தி
வல்லமை வேண்டும்நற் தெம்பு- அம்மா
        மாறாமல் வேண்டும் நினதருள் அன்பு.          20
 நூற்பயன்
 வாராகி இரட்டை மணிமாலைச் சிந்து
பாராயணம் செய்யக்  காப்பளருள் தந்து
வாராத நலமெல்லாம் தாம்வந்து சேரும்
தீராத நோயெல்லாம் குணமாகித் தீரும்



No comments:

Post a Comment