Sunday, May 12, 2019

வாராகி உலக்கை விருத்தம்


வாராகி உலக்கை விருத்தம்
 போராடி வந்திடும் தீராப் பகைவரைப்
       போட்டுப் புரட்டி வீழ்த்தும்
       பொல்லாங்கு செய்தவர் புல்லாகப் போயிடப்
       பூமிக்குள் தள்ளி ஆழ்த்தும்
சாராத நெஞ்சினர் யாரா யிருந்தாலும்
       தள்ளிப் புடைபுடைக்கும்
       சண்டைக் களத்தினில் கண்ட இடத்தெலாம்
       தாக்கி நடுநடுக்கும்
சேராத மேலுமி நேராக வேறாகத்
       தீட்டிப் புடைப்பதென்ன
       சிந்தைக்குள் வந்துள கந்தைகள் யாவையும்
       சீக்கிரம் வேறாக்கிடும்
வாராப் பகைவரைச் சீறி வழிகண்டு
       வாரிக் களத்தடிக்கும்
       வாராகி கைகளில் நேராய்ப் பிடித்துள
       வஜ்ஜிர வல்லுலக்கை
 தண்டநா தாகையில் தண்டம் கொடுத்திடத்
        தண்டுகொண் டேயிருக்கும்
        சக்கரம்  போலவே அக்கரை இக்கரை
        தானாய்ச் சுழல் விரிக்கும்

அண்டிப் பணிவோரின் சிண்டினில் அன்னையின்
       ஆசியைக் கொண்டு சேர்க்கும்
       ஆகாத பேர்களை வேகாத வெய்யிலில்
       ஆடவிட்டே யுருக்கும்
அண்டங்கள் யாவிலும் செண்டு புடைத்திடும்
       அட்டகா சம்புரியும்
       ஆகாசம் பாதாளம் வாகாகச் சென்றிடும்
       அச்சம் விளைத்திருக்கும்

மண்டலம் எங்கிலும் கண்டனம் என்னவே
       மக்களைச் சொல்ல வைக்கும்
       வாராகி கைகளில் நேராய்ப் பிடித்துள
       வஜ்ஜிர வல்லுலக்கை.

No comments:

Post a Comment