Sunday, May 12, 2019

வாராகி சம்வாதம்


வாராகி சம்வாதம்
வினா:
எங்க ளுக்குக் குறைகள் பலவும் உண்டே அம்மையே – இதுபோல்
ஏதும் உனக்கும் உண்டோ  அன்னாய், எடுத்துச் சொல்கவே
வாராகி விடை: 

பிறக்கும் போதே பெரிய ளாகப் பிறந்து விட்டேனே- அரும்
 பிள்ளை விளை யாட்டி லாமல் இருந்து விட்டேனே

வினா: 

பார்க்க நல்ல பொலிவாய்ப் பலரும் இருக்கும் போதிலே- நீயும்
பன்றி முகம் ஏனெ டுத்தாய்  சொல்க அம்மையே!

வா.வி:

தோன்று தீமை ஆழ மாக ஊன்றி விட்டதால் – அதைத்
தோண்டி வீசத் தேவை இந்தப் பன்றித் தோற்றமே
வினா: 

குடல்கிழிப்பாய் மது குடிப்பாய், என்று சொல்கிறார் – கேட்டால்
குலைநடுக்கம் ஆகுதம்மே என்ன சொல்கிறாய்”

வா.வி: 
அதனைக் கேட்டு நீயும் ஏண்டா கவலை கொள்கிறாய் – நான்
ஆளுக் கேற்பச் செயலெடுப்பேன் அறிந்து கொள்ளடா
வாளை ஏந்தி வருபவர்முன் வாளெடுக்கிறேன் – மாறாய்
வாழைப்பழம் தருபவர்முன் தணிந்து போகிறேன்


வினா:
 இறக்கும் பொழுதில் உன்னை நினைக்கும் எண்ணம் வருதற்கே – அம்மா
எனக்கு நீயும் அந்தச் சமயம் உதவி செய்வையா
?

வா.வி: 
 இந்தக் கணமே அந்தக் கணமாய் எண்ணிப் பழகிக்கொள் – ஆம்
அந்தக் கணத்தில் நினைத்த படியே எல்லாம் நடக்குமே!
 வினா :
 என்றனிடத்தில் நீயு மெதிர் பார்ப்ப தென்னேயோ- அதை
எடுத்துச் சொன்னால் அந்தப் படி இருக்கப் பார்க்கிறேன்

வா.வி: 
 உனக்குக் கொடுத்த பணியை நீயும் ஒழுங்காய்ச் செய்யடா- சமயம்
உனக்குக் கிடைக்கும் போதில் என்னை நினைவில் வையடா



No comments:

Post a Comment