Sunday, May 12, 2019

வாராகி தெம்மாங்கு


 வாராகி தெம்மாங்கு
கருக்கிருட்டு நேரத்திலே
      கால்நடையாய்ப் போறோமே
திருடர்கள் வந்துவிட்டா
      திண்டாடிப் போவோமே!
 திருடர்கள் வந்துப்புட்டா
     தேவி நம்ம வாராகி
கருக்கிருட்டு நேரத்திலும்
     காப்பா கலங்காதே!

தீரா நெடுந் தொலைவு
    செல்லுறோமே ஏமச்சான்
யாரே துணைவருவா
    அல்லாடிப் போவேனே!


அல்லாட வேண்டாண்டி
    அச்சங்கொள்ள வேண்டாண்டி
சொல்லாம நம்கூடத்
    துணைவருவா வாராகி

உச்சிவெயில் நேரத்திலே
    ஊருவிட்டுப் போறேனே
எச்சரிக்கை யாக நம்மை
    எவர்காப்பார் ஏமச்சான்

எச்சரிக்கை யாக நம்மை
    எவர்காப்பார் என்பவளே
கச்சைகட்டி வாராகி
    காப்பா கலங்காதே!

நட்டநிசி நேரத்திலே
    நான்பயந்து போவேனே
எட்டிவரும் பேய்பூதம்
    என்னசெய்யப் போகிறதோ
?

காத்துக் கருப்புகளும்
    காட்டேரி பூதங்களும்
ஆத்தாநம் வாராகி
    அருகில்வர ஓடிவிடும்

அருகில் வருவாளோ
    ஆடுபலி நாந்தரலே
பெரிசாகப் பூசைகளும்
    பிச்சிநான் செய்யவில்லே!

நெஞ்சாங் குழிக்குள்ளே
    நீயவளை வச்சுவிடு
அஞ்சாமக் காத்திடுவா
    அம்மை நம்ம வாராகி

நல்லவார்த்தை சொல்லிப்பிட்ட
    நம்பிக்கை கொடுத்துப்பிட்ட
செல்லாயி வாராகி
    தெய்வத்தைக் கும்பிடுவோம்

12-5-2018

No comments:

Post a Comment