Saturday, May 11, 2019

நெய்யபிஷேகம்


நெய்யபிஷேகம்

ஐயப்ப சாமிக்கு நெய்யபிஷேகம்
       ஆனந்தம் காண்கின்ற கண்களின் யோகம்
 கையில் பபயன்தரும் அன்புப்ரவாகம்
       காணலாம் நாமங்கே காருண்ய யோகம்

வானின் அபிஷேகம் மண்ணுக்கு மாரி
     மக்களின் வாழ்வில் வரம்தரும் வாரி
கானம் பொழிந்திடும் நாதாபிஷேகம்
       காதுகள் பெற்றிடும் ஆனந்த ராகம்

நாம் பெற்ற தேகம் ஓர் தேங்காயின் கூடு
       நம்முன் நிறைந்தநீர் காமத்தின் பீடு
தாம்கொண்ட தேங்காயின் கண்ணைத் திறந்தே
       சாய்த்திட நீங்கிடும் காமம் மறைந்தே!

த்தியத் தீம்பசும் பால் புரையிட்டுத்
       தர்மத் தயிரிடை ஞான மத்திட்டு
சத்தைக் கடைந்தருள் வெண்ணெயைக் காய்ச்சி
       சார்ந்திட நாம்பெறும் நெய் அவன் மாட்சி

கண்கள் திறந்துதேங் காயில்நெய் பெய்து
       காமம் புகலாமல் காவலைச் செய்து
அண்ணலை நெய்யிலே நாம் புக வைத்தே
       அன்பாய்த் தலையில் சுமப்போம் துதித்தே~

ஜீவன் பரம்பொருள் தன்னிலே ஏறும்
       சேதியை நெய்யபி ஷேகமே கூறும்
யாவும் அவன்பரம் என்கிற நேர்த்தி
       ஆவது நெய்ய பிஷேகத்தின் கீர்த்தி

ஒவ்வொரு பக்தனின் உள்ளொளி கூடி
       ஓங்கும் பரம்பொருள் ஒளியினில் கூடி
செவ்விய காட்சியாய்க் கண்களில் காட்டும்
       தேடியே வந்ததன் பயனினைக் கூட்டும்

சாமி தரிசனக் காட்சி முத்தாய்ப்பு
       சத்திய நெய்யபி ஷேகமே வாய்ப்பு
சாமியின் நாமம் நம் நெஞ்சில் தொடுப்போம்
       சரணம் எனக் குரல் ஓங்கிக் கொடுப்போம்~

No comments:

Post a Comment