Friday, May 10, 2019

அவன் தானே மூலம்


அவன் தானே மூலம்!

எண்சீர் விருத்தம்

ஆச்சரியம் அவனுருவம், ஆனந்த வெள்ளம்
        அவனிருக்கும் தாமரையோ அன்பர்களின் உள்ளம்
பேச்சரிய ஓங்காரப் பிரணவத்தின் ஜோதி
        பிறக்காத காலத்தே பிறந்திட்ட நீதி
வீச்சுடைய குண்டலினி பாம்புதவழ் உந்தி
        விரியண்டம் ஆதாரம் யாவுமவன் தொந்தி
தீச்சுடராய்க் காணுகிற ஒளிவடிவத் தோற்றம்
        ஜீவர்களின் இருள்போக்க எளிதாகும் ஏற்றம்

உள்ளிருக்கும் பூரணத்தின் உண்மையத னாலே
        உட்காரும் மோதகமும் உள்ளங்கை மேலே
வெள்ளெருக்கம் பூவதுவும் விநாயகனைச் சாரும்
        வேண்டாத பொருளுக்கும் புகழ்வந்து சேரும்
கள்ளிருக்கும் மலரென்ன, அறுகம்புல் போதும்
        கடல் என்றும்  அவன்நாத மந்திரத்தை ஓதும்
புள்ளிருக்கும் வடிவேலன் தந்தைசெவி அன்று
        புகன்றதெது, கணபதியின் மந்திரமே நன்று!

பாசத்தை ஏந்தியுயிர் படைக்கும் ஒரு கரமே
        பக்குவமாய் அங்குசத்தால் அழிக்கும் ஒரு கரமே
நேசத்தால் அபயமெனக் காக்குமொரு கரமே
        நிறைஞான அடிகாட்டி அருளுமொரு கரமே
மாசக்தி துதிக்கையினால் மறைக்குமொரு கரமே
        மாண்புடனே ஐந்தொழில்கள் யாவும் அவன் வரமே
ஓர்சக்தி யாய்த்தன்னுள் உருள்கின்ற ஞாலம்
        ஒவ்வொன்றுள் ளுமிருக்கும் அவன்தானே மூலம்!


No comments:

Post a Comment