Sunday, May 12, 2019

வாராகி தாலாட்டு


வாராகி  தாலாட்டு

ஆராத அமுதே என் அன்பே தாலேலோ
      அழகுமிகக் கொண்டவளே அரசி தாலேலோ
வாராகி வார்த்தாளி வரமே தாலேலோ
       வராகமுகி வராகமுகி வடிவே தாலேலோ
வாராத செல்வமென வந்தாய் தாலேலோ
        வாழ்விக்க வந்தவளே மகவே தாலேலோ
கூரான தந்தங்கள்  கொண்டோய் தாலேலோ
        குலம்விளங்க வந்தவளே கோவே தாலேலோ

 அன்னைலலி தாம்பிகையின் செல்லம் தாலேலோ
       ஆயுதங்கள் கையெடுக்கும் அருளே தாலேலோ
மின்னுமொளி கண்களிலே கொண்டோய் தாலேலோ
       வேகமுடன் காலுதைக்கும் மின்னே தாலேலோ
சின்னதொரு தூளிக்குள் சேர்ந்தாய் தாலேலோ
       திரிலோகம் வளர்சக்தி பெற்றோய் தாலேலோ
முன்னொளிரும் நெற்றிக்கண் கொண்டோய் தாலேலோ
        முக்கண்ணி மோகினியே முத்தே தாலேலோ

ஆனைபலம் கொண்டவள்நீ ஆனாலும் கைக்குள்
       அடங்கியொரு குழந்தையென ஆனாய் தாலேலோ
சேனைநடத் திடுவதென  பொம்மைகளை யெல்லாம்
       செப்பமுடன் அணிவகுக்கும் திருவே தாலேலோ
வானமழும் மண்ணுமழும் வளரண்ட மெல்லாம்
       வருந்தியழும் நீயழுதால் அழவேண்டாம் கண்ணே
ஆனவிந்தை அண்டத்தைக் கிலுகிலுப்பை ஆக்கி
       ஆட்டுகிறேன் நீகேட்டு மகிழ்வாய் என் கண்ணே!

 பால்தருவேன் பழந்தருவேன் பரமே தாலேலோ
       பாரடியில் கிழங்கெடுத்துத் தருவேன் தாலேலோ
கோல்தருவேன் உலக்கையென வைத்துக்கொள் பெண்ணே
       கொடுங்கலப்பை வில்லம்பு நான்தருவேன்  கண்ணே
மேல்சுழலும் சக்கரமும் கதையோடு பூவும்
       விளையாட நான் தருவேன் ஆடிடுவாய் கண்ணே
கால்விரித்து நீபடுத்தால் துணிகிழிந்து போகும்
       கால்மடக்கிப் படுத்துக்கொள் என்செல்லப் பெண்ணே!

உன்விழிகள் சிவப்பதுமேன் என்னருமைக்் கண்ணே
       ஓங்குசினம் கொள்ளுவதேன் வாராகிப் பெண்ணே
உன்கழுத்தில் போடுதற்கு  நவரத்ன மாலை
      உனக்காக அனுப்பியுளாள் லலிதாம்பா தேவி
என்னயிது வரம்கொடுப்ப தென்ன உன்றன் கையை
        இப்படிவைத் துள்ளாயோ
, என் தெய்வம் நீயே
என்னரசி என் தெய்வம் இதமே தாலேலோ
        எங்கள்குல நாயகியே இறையே தாலேலோ

தாலேலோ  தாலேலோ ஓ தண்ட நாதா
தாலேலோ தாலேலோ நீயெல்லாம் தாதா!

No comments:

Post a Comment