Friday, May 10, 2019

மதுரை மீனாக்ஷி பஞ்சகம்


மதுரை மீனாக்ஷி பஞ்சகம்

நேரிசை வெண்பா

அம்மா மதுரை அரசி, ஒயிலாகச்
செம்மாந் திருக்கின்ற சீமாட்டிதெம்பாகத்
தேக நலத்தோடே செம்மையாய் நான் வாழ
ஆகும் நலங்கள் அருள்

அருள்வேண்டி உன்னிடத்தில் யான்கேட்ட பின்தான்
தரல்வேண்டும் என்றால் சரியோ?  - பொருளோடே
எல்லா நலமும் இனியதமிழ் மீனாக்ஷி,
சொல்லாமல் ஈவாய் துணை

துணைவராம் சொக்கருடன் சொக்கி இருக்கும்
இணையிலா ஞான எழிலேபிணிக்கின்ற
நோய்க்குலங்கள் தாக்கியெனை நோகடிக் காதெனக்கு
வாய்க்கும் நலங்கள் வழங்கு.

வழங்கிச் சிவந்தவளே, மாதரசி, அண்டம்
கழங்கென ஆடும் களிப்பே- முழங்கும்
புகழ்தருவாய், பொன்தருவாய், போதம் தருவாய்
அகம்நிற்பாய் நீயே அரண்.

அரணாகத் தாயே அமைந்துவிடின் சேய்க்குத்
திரணாக வேறுண்டோ செப்பு- சரணாக
நம்பியுனை வந்தபின்னே நாடப் பிறிதுளதோ
அம்மவோ அம்மவம் மா!




No comments:

Post a Comment