Friday, May 10, 2019

என்ன கொடுப்பதவளறிவாள்


என்ன கொடுப்பதவளறிவாள்
அறுசீர் விருத்தம்

சரணம் அம்மா நீயென்றே
        சக்தி பாதம்பணிந்திடுவோம்
மரண அச்சம் ஓடிவிடும்
        வாழ்வில் என்றும் உன்னதமே
தருணம் நோக்கிக் காலத்தைத்
        தள்ளா தின்னே சரண்புகுவோம்
கருணை கொண்டு நமையெல்லாம்
        காளிகாம்பாள் காத்திடுவாள்
*
கும்மி

என்ன கொடுப்பதவளறிவாள்- அதை
        என்று கொடுப்பதவளறிவாள்
அன்னதை எவ்விதம் எங்குக் கொடுப்பதென்று
        அத்தனையும் அவள் தானறிவாள்
*
இந்த விதியைப் புரிந்துகொண் டாலென்றும்
        இன்னல்கள் ஏதும் கிடையாது
வந்துநிற் கும்யாவும் அன்னை அருளெனில்
        வாழ்ந்துநாம் பார்க்கத் தடையேது?

நீலக் கடலும் ஓம் ஓமென்றே நித்தமும்
        நீட்டி முழக்கிக் கவிபாடும்
நாலு மறைப்பொருள் ஆனநம் தாயவள்
        நல்லரு ளாலே புவியோடும்


காலம் கணிப்பவள் காளிகாம்பாளவள்
        காலம் கடந்தவள்,பூரணியாம்
மூலம் அவளென மூவுலகும் அருள்
        முந்தும் அவள்பதத் தோரொளியாம்.

No comments:

Post a Comment