Saturday, May 11, 2019

அறத்தின் நாயகன்


அறத்தின் நாயகன்

கலிவிருத்தம்

அறத்தின் நாயகன் அருமறை காத்தவன்
மறத்தில் நன்னெறி வாய்த்திடச் செய்தவன்
குறக்கு கந்தனைக் தம்பியாய்க் கொண்டவன்
ஒறுத்தல் செய்யினும் அறத்தில் நிற்பவன்

அறுசீர் விருத்தம்

சொல்லொன்றால், அன்பிற் கொண்ட
        துணையொன்றால், மனத்தின் ஏகும்
வில்லொன்றால், அறத்தில் சேர்ந்த
        வினையொன்றால், நிறமாய் வாய்த்த
அல்லொன்றால், அல்லல் ஏற்ற
        அருளொன்றால், காலில் பட்ட
கல்லொன்றால் பெருமை சேர்த்த
        காகுத்தன் கழல்கள் வாழ்க!

எழுசீர் விருத்தம்

தாதுகும் மலர்ச்சோலை மாநகர் தன்னை நீங்கியே தன்னரும்
தாதை சொல்லெனும் மந்திரம் பிணி தன்மையால் வனம் சென்றவன்
வேதம் ஓதிடும் மூல மந்திரம் மெய்ப்பொருள் தவ வித்தகன்
சீதை நாயகன் ராம சாமியின் செய்ய பாதமே போற்றியே!

இவனே இவனே இராமபிரான்

அறுசீர் விருத்தம்

ஆதி மூலம், அருள் வெள்ளம்
    அறத்தின் ஆணி, ஆலமரம்
வேதம் வணங்கும் மெய்ஞானம்
    வீரத் திற்கோர் மேலெல்லை
நீதி பாடம் கற்கின்ற
    நேர்மைப் பள்ளி, குருபீடம்
ஏதி லர்க்கோர் அபயகரம்
     இவனே இவனே இராமபிரான்

தந்தை சொல்லைக் காக்கின்ற
     தர்மம் காக்கும் வைரமனம்
வந்து நின்றே அபயமெனில்
     வாழ்வளிக்கும் கருணையுளம்
இந்த மண்ணில் மனிதனென
     இறங்கி நடந்த பெருந்தெய்வம்
எந்த உயிர்க்கும் அருள்நெஞ்சம்
      இவனே இவனே இராமபிரான்

ஓர்சொல் ஓர்வில் ஓரில்லாம்'
        உயர்ந்த வாழ்க்கை ஆதாரம்
பேர்சொல் கின்ற அடியவரின்
        பிறவி போக்கும் பேரிதயம்
நேர்மை, தன்னைப் புதுப்பிக்க
        நின்றே உரசும்  புனிதமலை
ஈர்க்கும் அழகுக் கெல்லை நிலம்
      இவனே இவனே இராமபிரான்.
வான ரத்தை, வேட்டுவனை
        வல்ல ரக்கன் வீடணனை
தானி ருக்கும் நிலைக்கொப்பத்
        தம்பி யர்கள் ஆக்கியவன்
மானம் காக்கத் தீக்குள்ளே
        மனைவி தன்னை இறக்கியவன்
ஏனென் கின்ற நிலைகடந்தோன்
       இவனே இவனே இராமபிரான்

கையோ வீரம் விளைவிக்க
        காலோ பெண்ணை உயிர்ப்பிக்க
மெய்யாம் சொல்லோ தீயர்களை
        வீழ்த்தித் தேவர் தமைக் காக்க
மையின் வண்ணன் விழிப்பார்வை  
வாரி வாரி அருள்பொழிய,
எய்த்தல் இன்றி வாழ்ந்தயிறை
        இவனே இவனே இராம பிரான்

வாழிய இராம வள்ளல்
        வாழிய இராம நாமம்
வாழிய அவன்பேர் சொல்லும்
        மன்னுயிர் அனைத்தும், என்றும்
வாழிய தெய்வ நீதி
        வாழிய எங்கள் தேசம்
வாழிய உலக மெல்லாம்
        வாழிய வாழ்க, வாழ்க!

No comments:

Post a Comment