Friday, May 10, 2019

கருமாரி அந்தாதி

கருமாரி அந்தாதி

படித்தவர்கள் சொல்கிறார்கள்:
இப்புத்தகம் கிடைத்தது எனக்கு ஒரு துணைவனைப் போல் உள்ளது. என் மனத்தில் சஞ்சலங்கள் தோன்றும் சமயங்களில் என் மனம் அமைதியடைய இப்புத்தகத்தை வைத்து அமைதியாக இருந்து இதைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் மூலம் நான் என் சஞ்சலங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் மனச்சாந்தி பெற முடிகிறது 
                                                        ஜி. திருவேங்கடம்    இராமேஸ்வரம்
இனிய பக்திச் சுவை ததும்பும் பாடல்கள் நூல் முழுதும் விரவியுள்ளன. இதயத்துடன் நேரில் உறவுகொள்ளுகின்றன பாடல்கள்.  தினமணி மதிப்புரை

கவிஞரின் சொல்லோட்டமும் சொல்நயமும், சொல்வளமும் இந்த அந்தாதியில் மின்னலிடுகின்றன. சமீப காலத்தில் வெளிவந்த அந்தாதி நூல்களில் தலை நிலத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளது இது.  தேவிஸ்ரீ கருமாரி அம்மையின் அருள் நயத்தையும் அழகு வளத்தையும் கருணை மனத்தையும் பேசி மணக்கிறது. தேவி கருமாரி அம்மன் அடியவர்களுக்கு இது ஒரு முறையான நூல். கருமாரி அம்மனைப் பற்றிப் பல்வேறு நூல்கள் இருந்தாலும் இது முறை தழுவிய கவிதையாகவும் அருள் கெழுமிய நூலாகவும் விளங்குகிறது. இந்த நூலை முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியதாகத் தெரியவில்லை. ஸ்ரீகருமாரி தானே கவிஞர் நெஞ்சில் இருந்து சொல்கூட்டிப் பாடிக் கொண்டதாகத் தெரிகிறது.

                                        ஸ்ரீதுர்க்கைச்சித்தர்   அருட்குரல் மதிப்புரை

முதற்பதிப்பின்  முன்னுரையிலிருந்து சில பகுதிகள்

இந்நூல் அன்னையின் அருட்பொலிவை,யும் கருணைத்திறத்தையும் சிறப்புறப் பாடுகிறது. பாராயணம் செய்வதற்கு ஏற்ற நூல்.  தவத்திரு சுவாமி இராமதாசர்

அந்தாதி எங்கும் அழகுதமிழ் கொஞ்சுகிற
வித்தையே கண்டேன். வியந்தெழுமென்சிந்தையிலே
அன்னை கருமாரி ஆள வகுத்தாய் உன்
வன்னச்சொல் வாழ்க வளர்ந்து.-  குருதேவர் பேராசிரியர். . சீநிவாச ராகவன்


பத்தி சிறக்கப் பதம்சிறக்க உட்பொருளின்
உத்தி சிறக்க உரைத்தனனால்- சித்திதரும்
தேவி கருமாரி அந்தாதி சீரிலந்தை
மேவும் இராமசா மி.-                       வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன்

உன்னருள் வீச்சால் அந்தாதி பாடக் கவிதொடுத்தான் இலந்தை இராமசாமி. அந்தாதி கோவையாக அலைஅலையாகப் பக்தி சிறக்கப் பண்ணோடு இசைந்து வரச் செய்த அருள்தான் என்னே! --  ஸ்ரீ இரமணி சுவாமிகள்

அன்னை கருமாரி வேண்டுவன வழங்கும் கொடையாளி. அவளை நினைந்து , கசிந்து பாடிய பாடல்கள் இவை. திருவழங்கும் கருமாரியின் முகப்பொலிவையும் கருணையையும் இந்த அந்தாதியில் காணலாம்   - ஸ்ரீ துர்க்கைச் சித்தர்.

இம்மாலையில் இணைந்த மலர்கள் நறுமணம் கமழ்கின்றன. வெண்பாக்கள் ஓசை நயமும் உருக்கமும் பெற்றவை.    மகரிஷி  கவியோகி சுத்தானந்த பாரதி.

இந்நூல் அந்தமும் ஆதியும் இல்லாத அன்னையைப் பற்றிய அந்தாதி. இதைப் படித்துப் பாராயணம்  செய்பவருக்கு, எண்ணம் சிறக்கும், இனிமை பெருகிவரும் ஞானம் பெருகிவரும். தேர்ச்சி வரும். இதில் ஐயமில்லை.-    பாரதி சுராஜ்

என்னுரை

ஆட்கொள்ள வேண்டிப் பாடுபவர்கள் உண்டு. ஆட்கொள்ளப்பட்டுப் பாடுகிறவர்களும் உண்டு. பகழிக் கூத்தருக்கு வயிற்றுவலி தந்து பாடல்கொண்டான் முருகன்.
நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்என்றார் அபிராமி பட்டர்.
கவிதையாவும் தனக்கெனக் கேட்கிறாள்என்றார் மகாகவி பாரதியார்
நான் எப்படிப்பாடினேன்.? அதைத்தானே சொல்லப்போகிறேன்.

1972ம் ஆண்டு. திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலிலே பாரதி கலைக் கழகக் கவியரங்கம். அதில் நான்ஸ்ரீ தேவி கருமாரி வெண்பாஎன்ற தலைப்பில் முப்பது வெண்பாக்கள் அந்தாதி முறையில் எழுதினேன். பிறகு எப்பொழுதாவது அதை நூறாக முடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.
நான்கு மாதங்கள் கழித்து என் குழந்தைகள் இருவருக்கும் அம்மை போட்டது.  அப்பொழுது ஒரு பெரியவர்நீங்கள் அம்மனுக்கு ஏதோ குறை வைத்திருக்கிறீர்கள். நிறைவு செய்துவிடுங்கள்என்றார். அந்தாதியை நிறைவு செய்ய வேண்டும் என்று மனத்தில் எண்ணினேன். ஆனால் செய்யவில்லை. இரண்டுமாதங்கள் கழித்து மீண்டும் இருவருக்கும் அம்மை போட்ட்து.  அந்தாதியை நிறைவு செய்வதாக வேண்டிக் கொண்டுமேலும் பத்துப் பாடல்கள் எழுதினேன்.முடிக்கவில்லை, இப்படியாக நானும் அம்மனும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.
. . 1973ல் சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு கிளம்பினேன். புறப்பட்ட அன்று இரு குழந்தைகளுக்கும் சொல்லிவைத்தாற்போல் அம்மை போட்டது. நான் திரும்பிவந்ததும் என் மனைவி சொன்னாள்: பையனுக்குக் கண்பார்வை போய்விட்டது. அந்தாதியை நிறைவு செய்யச் சொல்வதாக வேண்டிக்கொண்டேன். சரியாயிற்று. எனவே எழுதி முடித்துவிடுங்கள்என்றாள்

அம்மையின் அருளால் எழுதி முடித்தேன். கையெழுத்துப் படிவத்தில் இது அமரர் கவிமாமணி இளங்கார்வண்ணன் வீட்டில் அரங்கேறியது. நூல் வடிவத்தில் 1974 டிசம்பர் 24ம் தேதி திருவேற்காடு கோவிலில் அரங்கேறியது. அங்குதான் புத்தகம் வெளியிடப்பட்டது.
வரலாற்றைச் சொல்லிவிட்டேன். இப்பதிப்பு அழகுற வெளிவரப் பேருதவி புரிந்த கவிமாமணி மஹி அவர்களுக்கும் ஆஷா அச்சகத்தாருக்கும் நன்றி
தேவி அருள் நிறைக!
கூண்டுகொண்ட நெஞ்சில் குடிகொள்ள நீவந்தே
ஆண்டுகொண்டாய் அம்மா அடைக்கலம்நான்வேண்டுகிற
உன் நாமத் தந்தாதி உள்ளம் இருத்துபவர்
எந்நாளும் வாழ்க இனிது.

இலந்தை சு இராமசாமி
 முதற் பதிப்பு- டிசம்பர் 74                   

இரண்டாம் பதிப்பு: ஜூலை 82
ஸ்ரீ தேவி கருமாரி அந்தாதி

ஸ்ரீ தேவி கருமாரி அந்தாதி

காப்பு

தொந்திக் கணபதியே , தும்பிக்கை ஆண்டவனே
முந்திக் கனிபெற்ற முன்னவனே- வந்தித்தேன்
அந்தாதி இல்லாத அன்னை கருமாரி
அந்தாதி நெஞ்சில் அருள்.                                              

நூல்

பொங்கும் உணர்வுகளின் பூரணமே, வேற்காட்டில்
தங்கி அரசாளும் சக்தியே- திங்கள்சேர்
கற்றைக் குழலான்தன் காதலியே, மாரியே
எற்றைக்கும் என்னெஞ் சிரு.                             1

இருப்பதுவும் இல்லா திருப்பதுவும் , கொள்ளும்
விருப்பதுவும் வேறு விதமும்- பொருத்தமுற
மாறுபாட் டுள்ளேயும் மாறாது நிற்பதுவும்
நீறுகூட்டும் தாயே நீ!                                   2

நீயே பராசக்தி, நீயே முதற்சக்தி
நீயே நிலைக்கும் நிரந்தரிநீயேதான்
அந்தரி, சுந்தரி, அன்னை அபிராமி
மந்திர ஞான மறை.                                     3

மறையின் உருநீ, மறையின் பொருள்நீ
மறையின் முதலும்நீ  மாரி     - நிறைவாக
வானத் திறங்கியிவ்     வையம் புரந்திடும்
ஞானத்தி, சக்தி, உமை.                          4

உமையே கருமாரி உன்தாள் தொழுவார்
தமையே உறவாய்த் தருகஅமைவாய்த்
தனையே புகழும் தருக்கை அறுத்துன்
நினைவே தருகவுளம் நின்று.                            5

நின்றெரியும் தீநாக்கில் நின்செம்மை, வானத்தில்
சென்றுவரும் மேகத்தில் நின்கருமை- ஒன்றியுளம்
பற்றியுனைப் போற்றும் பரவசமே நின்பசுமை
சுற்றுகதிர் நெற்றிச் சுடர்.                        6

சுடரும் திருமுகச் சோதியில் தோன்றிப்
படரும் அருளெனும் பார்வை- குடரில்
பிறக்கும் பரிபவப் பீடையைப் போக்கித்
திறக்கும் சுவர்க்கத் திரை.               7

திரைகடல் சூழ்ந்து திகழ்ந்திடும் ஞாலப்
புரைகெட வந்த புகழே- வரைமுடி
கொண்ட திருமணக் கோலம் குறுமுனி
கண்டநற் காடே கதி                            8

கதியிலே மாறாக் கணங்கள் நினது
விதியெனும் கட்டில் விரையும்- கதியுறும்
பெண்மையே என்மனப் பேதைமை ஏற்றருள்
உண்மையே சொல்லில் உரை.                   9

உரைக்கின்ற சொல்லில் உறுபொருளே பக்தி
கரைக்கின்ற நெஞ்சில் கனிவே- அரைக்கும்
மணங்கமழ் சந்தன வாசமே, தேவி
வணங்கத் தருவாய் வரம்.                               10

வரம்பெற்ற சத்தியமே, மாசற்ற நெஞ்சின்
உரம்பெற்ற பக்தி உயிர்ப்பே- நரம்புற்ற
நாத வடிவே நளினமே தேவிநீ
போதம் அளித்திடும் பொன்.                             11

பொன்னின் ஒளியே, புதுமலரே, பூரணமே
கன்னல் சுவையமுதே, கற்பகமே- மின்னல்
விரைவே, விரிகதிரே, வேற்காடு மேவும்
பரிவே, தொழுதேன் பதம்.                               12

பதமே பணிக, பணிவே நிறைக
இதமே செயலில் எழுக- நிதமே
மதமே படியா வகையே அருளைச்
சதமே பெறுதல் தலை.                          13

தலைப்படும் நல்லன சக்தி யருளால்
நிலைப்படும் என்றே நிமிர்ந்தேன் - மலைப்பெனத்
தோன்றுவ தெல்லாம் துதியுறும் தாயருள்
ஊன்ற எளிதாம் உடன்.                          14

உடனேகி வாரா ஒழிபொருள் தன்னைத்
திடமெனப் பற்றித் திரிந்துகடனேயென்(று      )
ஆழவா இப்பார் அடைந்தனம், காட்டுவாய்
வாழவோர் நல்ல வழி.                          15

வழிகாட்டி, சொல்லும் வகைகாட்டி, செய்ய
மொழிகூட்டி, காண முகத்தில்- விழிகூட்டிக்
காணென்று சொன்னாய்நற் காட்சிகளைக் காட்டுவித்தாய்
பூணென்றாய் சாம்பர்ப் பொடி.                            16

பொடியன் எனையும் பொருளாக ஏற்றுன்
அடியாரிற் சேர்த்தே அருள்வாய்விடியல்
வெளிச்சத்தைக் காட்டி விரியும்நற் கால
ஒளிச்சத்தை என்னுள்ளே ஊற்று.                17

ஊற்றுக்கோல், கால உதவுக்கோல், தீவினை
மாற்றுக்கோல் வாய்மை வரவுக்கோல்நீற்றுக்கோல்
தேம்பிடும் நெஞ்சிற்குத் தெம்புக்கோல் ஆகும்தாய்
சாம்பலுக் குண்டோ சமம்.                               18

சமன்செய்யத் தென்புலம் சார்ந்த முனிவன்
தமிழ்பெற்றான் காட்டுத் தலத்தில்அமிழ்தாய்க்
களித்த முனிக்குக் கடிமணக் கோலம்
அளித்தாய்பின் நீறாம் அணி.                            19

அணிந்தான் அரன்நாகம், அம்மையோ ஐயன்
அணிந்த அரவவுரு ஆனாள்- பணிந்திடும்
நாகர்கள் வேண்டிட நல்லநடம் ஆடினாள்
வேகமாய் இன்னும் விரைந்து.                   20

விரைந்தாடும் ஆட்டத்தின் வேகத்தைப் பார்த்த
அரவங்கள் அத்தனையும் ஆட- அரவுலகும்
சுற்றிச் சுழன்றாடும் தொன்மாரி ஆட்டத்தை
எற்றைக்குக் காண்போம் இனி?                  21

இனிக்கின்ற தீங்கரும்பில் இன்னமுதாய், தெய்வம்
நினைக்கின்ற நெஞ்சில் நிறைவாய்- பனிக்கின்ற
கண்ணில் கருமணியாய்க் காண்பவள் தான் வேற்காட்டு
மண்ணில் திகழும் மணம்.                               22

மணம்நீ, மலர்நீ, மகிழும் உளம்நீ
அணிநீ , அழகுநீ அன்பு- மணிநீ
இறையவன் ஆடும் இயக்கம்நீ தேவி
நிறையில் நிறையும் நிறை.                             23

நிறைவெல்லாம் நீயென்று நின்தாள் பணிந்து
துறையெல்லாம் காட்டத் தொழுதேன் முறையிட்டே
அம்மா எனநான் அழுதாலும் வாராது
சும்மா இருப்பாயோ சொல்?                             24

சொல்லடி சக்தி, துடிப்புடன் எந்நாவில்
நில்லடி, கேட்போர் தம் நெஞ்சத்தைவெல்லடி
வல்லடி யின்றி வசையின்றி வாழவோர்
நல்லடி நின்னடி யே!                                    25

ஏனம்மா இன்னும் இரங்கா திருக்கின்றாய்
வானம் மறைக்கின்ற மாயம் ஏன்?- ஞானம்
நிறைகின்ற வாழ்க்கை நெறியெல்லாம் காட்டிக்
குறைவில் குறமொன்று கூறு                   26

கூறுபடப் பிளந்து கொல்லுகிற போதினிலும்
மாறுபடாக் கொள்கை மனம்வேண்டும்நீறுகொண்டு
மன்பதை காக்கும் மகமாயி , இவ்வரம்நீ
என்றனுக்கு ஈவாய் இசைந்து.                   27

இசையில் இசையாய் இசையும் இசைவே
அசையில் அசையும் அசைவே- பசையாயென்
நெஞ்சம் நிமிர்ந்த நிமிர்வே பிடித்தேன் உன்
தஞ்சம் அளித்திடும் தாள்.                               28

தாளைப் பிடித்தேன், சரணமென்று கூச்சலிட்டேன்
வேளைநீ பார்க்கும் விவரமென்கோளையெலாம்
கையகத் தாட்டிடும் காளி புதிராகும்
செய்திடா நின்றன் செயல்.                       29

செயலும் செயலில் திகழும் பயனும்
புயலும் அமைதியும் போரும்முயலும்
அனைத்துமே தயவள் ஆணையில் என்றால்
நினைப்பது வேறென் நெறி?                             30

நெறிநின்ற நெஞ்சில் நிகழ்கின்ற காட்சிப்
பொறிநின்ற ஞானப் பொருள்தான்அறிவொன்று
வித்தகத் துள்ளே விளங்கிடா ஞானச்
சித்தகத் துள்ளே தெளிவு.                                31


தெளிக்கின்ற மேல்வானச் செக்கர்க் கவிதை
களிக்கின்ற தாயே என் காளிஒளித்தோடும்
மின்னல் இடைமேனி மெல்லியலே ஓடிவந்து
என்னையாட் கொள் அன்னை யே!                       32

அன்னை அவள்தன் அழகுத் திருவுருவை
உன்னும் பொழுதில் உளமலரும்மன்னிடும்
சூலமும் செங்கைத் துடியும் முத்தாரமும்
கோலமும் நெஞ்சக் குறி.                                33

குறித்துத் தலையில் அயன் கோடுகளை மிக்குப்
பொறித்தே விதியாக்கும் போதும்- நெறிக்குள்
துதித்தன்னை பாதம் தொழுவீர் அதுவே
விதிக்கும் விதிக்கும் விதி.                               34

விதியே என நொந்து வேதனையில் வீழா
மதியே அருள்வாய் மகிழ்ந்துகதியாய்
அமரரும் வேதமும் யாவரும் போற்றும்
உமையே கருமாரி யே!                         35

கருமாரி, நன்மை தருமாரி மண்ணில்
உருமாறி ஜோதி உருவாய்அருள்மாரி
பூமாரி, சொல்மாரி, போர்மாரி, காந்தாரி
தீமாரி நெஞ்சில் சிரி.                                    36

சிரிப்புக் கிடமாய்த் திரியாது வாழ்க்கை
விரிப்பை நலஞ்செய வேண்டின்கருப்பை
வழிவரா வண்ணம் வழங்குவாள் நாமம்
மொழிவதே நல்ல முறை.                               37

முறைகெட்டுச் சொல்லும் மொழிகெட்டு நெஞ்சம்
தறிகெட்டுப் போதல் தகுமோ-குறைகொட்டி
உன்பால் அளந்தேன் ஒருபாரம் நான்தந்தேன்
என்பாரம் உன்பார மே!                          38

பாரம் சுமக்கும் பராசக்தி நின்னோடு
பேரம் இசைத்திங்கே பேசுவதோசூரன்
தலைகொய்ய வேல்குகற்குத் தந்தவளே நீயே
நிலைபெய்த வாழ்வுக்கு நேர்.                            39

நேர்மை இதுவென்று நெஞ்சம் பயில்கின்ற
நீர்மை மறந்தேன் நெறியற்றேன்ஓர்மை
உளநாள் வரைக்கும் உனைநான் நினைக்கும்
வளமை தருதல் வகை.                         40

வகையுளிப் பாட்டாய் என் வாழ்க்கை அமையாத்
தகவளித் தாலே தயவாம்அகவொளித்
தீபம் நிமிர்ந்து திமிர்ந்து சுடர என்
தாபம் குறைத்தல் தகை.                        41

கையூட்டு வாங்குகிற கண்ணியத்தில்  மக்கள்மெய்ப்
பையூட்டி வாழ்கின்ற பாரிடத்தே- பொய்யோட்ட
மையூட்டும் மேனியெழில் மாரியே தந்தருள்வாய்
மெய்யூட்டி வாழும் வெறி.                               42

வெறிகொண்ட நெஞ்சின் வினைகொண்ட ஐந்து
பொறிகொண்ட கோலங்கள் போதும்-நெறிகொண்ட
உள்ளத்தில் நின்றும் உலகாள்வாய், அன்பென்னும்
வெள்ளம் கரைபுரள வே!                         43

வேறென்ன வேண்டும் விரிகின்ற நின்னருள்
பேறன்றோ என்றும் பெரிதாகும்நீறென்னும்
ஒன்றாலே உய்விக்கும் ஓங்காரி யாவர்க்கும்
நின்றாளே தங்கும் நிழல்                                44

நிழல்தருவில் பச்சையினாள் நித்தம் வலம்செய்
தழலுருவில் செம்மையாய்ச் சார்ந்தாள்- குழல்வண்டின்
ரீங்கார மாகி நிமிர்கின்ற நீர்மையினாள்
ஆங்காரி அன்னை அவள்                               45

அவளருள் பெற்றார்க் கடைந்திடும் துன்பம்
அவனியில் இல்லையென் றாக்கிப்- புவனத்தை
வீறுடன் காக்கும் வியன்மாரி அன்னையவள்
கூறுவாள் நல்ல குறம்                          46

குறம்பாடி அன்னை குறிசொல்வாள், வாழ்வில்
அறம்யாவும் காட்டி அமைவாள்- திறம்பாடி
செல்லும் வழியைத் திருத்துவோம் ஈதொன்றே
வெல்லச் சிறந்த விதம்.                         47

விதந்தரும் பார்வை மிகப்பல வாக
நிதநிதம் சுற்றல் நெறியோ- இதந்தரும்
பக்தி வழியே பரிபவம் தீர்த்திடும்
சக்தி அடியே சரண்.                                     48

சரணென நின்பால் தருவதற்கு என்பால்
திரணமாய் ஏதுளது தேவி- கருணையால்
எல்லாம் நினதடிக்கே ஏற்பிக்க வேண்டுமொரு
வல்லமை நீயே வழங்கு.                                49

வழங்குமெய் ஞான வடிவினை, அண்டம்
கழங்கென ஆடும் களிப்பை- முழங்கிடும்
செஞ்சொல் அழகினைச் சேவிக்கத் துன்பங்கள்
பஞ்சாய்ப் பறந்திடும் பார்.                               50

பார்ப்பவளை, காளி பயங்கரியை, நன்மையெல்லாம்
சேர்ப்பவளை வேற்காட்டுத் தேவியினை- பூப்போல
நம்மையெலாம் ஆளுகின்ற நாயகியை, மாரியாம்
அம்மையை நெஞ்சே அறி                               51

அறிந்தேன் என நான் அகம்கொண்ட போழ்தில்
முறிந்தேன், உளமாம் முகையில்- நறுந்தேன்
பொழுதெல்லாம் பெய்தென்னைப் பூரணியே காக்கத்
தொழுதேன்நின் பாதம் துணை.                  52

துணைநீ என் றன்னைபதம் தோத்திரங்கள் செய்தால்
பிணியகலும் நன்மை பெருகும்- துணிவுவரும்
பொய்மை தொலையப் புகழ் மலரும், நல்லனவாய்ச்
செய்கின்ற யாவும் சிறப்பு.                               53

சிறப்புவரும், உள்ளத் தெளிவு வரும், ஞானத்
திறப்புவரும், நன்மையே சேரும்கறுப்பெழிலை
வந்தித்துப் போற்றியே வாழ்த்துவார் நெஞ்சத்தில்
சிந்தித்த தெல்லாம் ஜெயம்.                             54

ஜெயங்கொள்வர் இல்லையெனத் தேவர் குலத்தைப்
பயங்கொள்ள வைத்த பகைவன்மயங்கும்
அரக்கன் தலைகொய்து  அமரரைக் காத்த
பெருக்கமோ சொல்லப் பெரிது.                  55

பெரிதென்றால் இன்னும் பெரிதாய் மிகவும்
அரிதென்றால் மேலும் அரிதாய்பெருகிவரும்
அன்பென்றால் இன்னும் அதிகமாய் நிற்கின்றாய்
என்னென்று நான்சொல்லு வேன்.                        56


சொல்லுவதும் நின்நாமம், தோத்திரங்கள் சொல்லிவிதி
வெல்லுவதும் நின்பேர்சொல் வேதங்கள்- மல்குபுகழ்
பூக்கும் புதுமலரே பூரணமே, நீ கவிதை
வாக்கினிலே வந்தருளும் வான்.                 57

வானம் சினந்தால் மழையேது, தேடலரும்
ஞானம் சினந்தால் நலமேது- மானம்
சினந்தால் மலரும் சிறப்பேது? மாரி
சினந்தாலே ஏது திரு?                                   58

திருவும் கலையும் தினமும் தொழவே
பெருகும் அருளின் பிழம்பே - வருக 
தருக நினையே சரணம் எனவே
உருகி உயரும் உளம்.                                   59                     

உளமொன்று பக்தி உணர்வில் திளைத்துப்
புளகித்து நிற்கும் புனிதம்-வளமொன்றி
பச்சை கொழித்துப் படரும்வேற் காடுதான்
இச்சித்துக் கொண்ட இடம்.                              60

இடங்கொண்ட ஐயனின் ஏவலைத் தாங்கித்
திடங்கொண்ட நெஞ்சோடு சேர்ந்துபடங்கொண்ட
பாம்பின் உருவில் இப் பாரினைக் காக்கவே
சாம்பல் தருகின்றாள் தாய்.                              61

தாயை, தனிப்பொருளை, சாம்பல் திறத்தாலே
மாயம் விளைத்திடும் மாரியைப்- பாயுமெழில்
புண்ணியத்தை, ஞானப் புனிதத்தை வைப்பாய்நீ
கண்ணியமாய் நெஞ்சக் களம்                   62

களத்திடைச் சென்ற களிறாய், பொறிகள்
உளத்திடை ஏகி உழற்றும்அளப்பரும்
தொல்லை தருதல் தொலைத்தவை வென்றிடும்
வல்லமை தந்தருள் வாய்.                               63

வாய்த்த சடையன் மனையாளைத் தீவினையைத்
தேய்க்கும் கருமாரித் தேவியினை,- பேய்க்குலங்கள்
சஞ்சலப் பட்டுத் தவித்தோடச் செய்பவளை
நெஞ்சே நீஎன்றும் நினை.                               64

நினைவெனச் சேர்ந்திடும் நின்னருள் ஊற்றில்
நனைவது தானே நலமாம்- புனைவதாய்ச்
சொல்லிடும் பாட்டில் சுடர்விடும் தேவி என்
கல்மனத் துள்ளும் கனி.                         65

கனிவொரு பக்கமும் காதகர் மாய
முனிவொரு பக்கமும் மூட்டித்தனியொரு
காட்டில் இரண்டுருக் காட்டிடும் தேவியை
நாட்டுவாய் நெஞ்சில் நனி.                              66

நனிசிறந்த வேதங்கள் நாடித் தொழவே
கனிசிவந்த பாதங்கள் காட்டி- பனிமலர்
பூக்கும் தலத்தில் பொருந்தியர சாள்பவளை
நீக்கமறப் போற்றும் என் நெஞ்சு.                67

நெஞ்சம் அசைய, நினைவசைய அந்நினைவில்
விஞ்சையென எந்நா விரைந்தசையசெஞ்சொல்
மொழியசைய செய்தி முகமசைய , வாழ்க்கை
வழியசைய எந்நாவில் வா!                              68

வாரா திருந்தால் வரவழைப்பேன், என் சொல்லால்
பாராக் கொடுத்தென்னைப் பாரென்பேன்கூராகப்
பாய்ந்திடும் சொற்பரிசால் பாராட்டி வேண்டுகிறேன்
வாய்ந்திடும் நின்னருள் வாழ்த்து.                        69

வாழ்த்துகிற நெஞ்சும் மனம்பொய்யாய் எண்ணுவதைத்
தாழ்த்துகிற பண்பும் தரவேண்டும்சூழ்ச்சியால்
மால்கொண்ட தேவர் மயக்கறுக்க்க் கந்தனுக்கு
வேல்தந்த வேற்கண்ணி யே!                            70

கண்ணியம் உன்பேர் கருத்தில் இருத்துவதாம்
புண்ணியம் உன்புகழே போற்றுவதாம்- எண்ணியெண்ணிப்
பண்ணுகிற பூசை பராசக்தி நின்னடிக்கே,
நண்ணுகிற யாவும் நலம்.                               71

நலம்கொண்ட ஐங்கரனாம் நன்மகனும், உன்றன்
தலங்கண்டு நின்தாளைச் சார்ந்துவலங்கொண்ட
சங்கெடுத்துப் பொய்கைசேர் தண்ணீரால் நீராட்ட
அங்கெடுத்துக் கொண்டாய் அணைத்து.           72

அணைகட்டா ஆற்றுநீர் ஆர்த்திடும் போது
புணைகட்டா வண்ணம் புகவோ- பிணிபட்ட
இத்தரை வாழ்வை இனிதே நடத்திட
முத்திரை அன்னை முகம் .                             73

முகமிரு பண்பை முறைபடக் காட்டி
அகமிருக் கின்றனள் அன்னை- தகவுடன்
சாந்தமும் வீரமும் சார்ந்திடக் கோவிலில்
போந்த கருமைப் புயல்.                         74

புயலே , புயலால்  பொழியும் மழையே
இயலும் நடமே இசையேமுயலும்
செயலே செயலின் சிறப்பே, வளமே
அயலே அகமே அருள்.                          75

அருளே , அருளின் பொருளே,அறிந்தார்
தெருளே, மனத்துச் செறிவே- உருளும்
அகிலம் அனைத்தையும் ஆட்டிப் படைக்கும்
முகிலேஎம் வாழ்வுக்கு முன்.                            76

முன்னெனச் சொல்வதும் , பின்னெனச் சொல்வதும்
அன்னை முடியும் அடியுமாம்அன்னையே
முன்னுக்கும் முன்னுக்கும் முன்னாகி நிற்பவள்
பின்னுக்கும் பின்னுக்கும் பின்.                   77

பின்னிடும் வாழ்க்கைப் பிணியில் பிணிபட்டுத்
தன்னையே நெய்யும் தறியூடே - நின்னருள்
நேரிழை ஓடி நெறிசெய்ய வேண்டினேன்
சீரினை நீயுடன் செய்.                                   78

செய்வதும் செய்யப் பெறுவதும் அச்செயல்
எய்தும் பயனாய் எழுவதும்உய்வதும்
தேவி கருமாரி தெய்வச் செயலென்று
யாவரே தேரா தவர்.                                    79

தேரா தவருக்கும் தேர்ச்சி உடையார்க்கும்
யாரா யிருந்தாலும் அன்னையருள்வாராதோ?
வந்துநலம் தராதோ வாலைபதம் என்றென்றும்
சிந்தித் திருந்தாலே செப்பு.                               80

செப்பும் மொழிக்கெல்லாம் தேவியவள் நாயகியாம்
முப்புரம் தானெரித்த மூலவனின்ஒப்பரிய
தேவி கருமாரி தெய்வத் திருப்பாதம்
பாவித்தால் உண்டோ பயம்.                             81


பயந்தாளை மூவுலகும் பக்தர்க் கபயம்
நயந்தாளைத் தாளிணையை நாடிஉயர்ந்தார்தம்
எண்ணத் துறைபவளை ஏழில் இளையவளை
நண்ணித் தொழுதிடுவேன் நான்.                 82

நான் எனது என்று நவின்றே தருக்குற்று
வானதிர வம்புரைக்கும் மாந்தரிடை- நானிருக்கத்
தேனமுதத் தெய்வத் திருவால் அரவணைக்கும்
வானருளை வாழ்த்தும் மனம்.                   83

மனமும் இசைத்திடும் வாக்கும் செயலும்
தனமும் பொருளும் தகவும்- உனதருள்
வீச்சில் விளைந்து விரியுமேல் அன்னையே
பேச்சினி உண்டோ பிற.                         84

பிறந்தேன், உனதடி பேசித் துதிக்க
மறந்தேன், உனதருள் வாழ்த்தால்- சிறந்தேன்
இனியொரு காலும் எமபயம் இல்லாத்
தனியொரு நல்லருள் தா.                               85

தாவிக் குழந்தையாய்த் தாயே எனவேண்டிக்
கூவி அழைத்தால் குழைந்திடுவாள்- மேவியரன்
பாகம் கலந்த பரிசுடையாள் மாரிகரு
மேகத்தாள் வேற்கண்ணி யாள்                  86

வேற்கண்ணியாள், எங்கள் விந்தை மனம்நெய்த
நூற்கண்ணியாள், காக்கும் நோன்பினாள்- வேற்காட்டில்
நாட்டத்தை வைத்திட்ட நாயகியாள் தாளிணையே
வாட்டத்தைப் போக்கும் மருந்து.                 87

மருந்தாகும் வேப்பிலை மாரியின் கையில்
விருந்தாகும் தீமை விலக்கும்விரைந்துவரும்
பூதம் பிணிக்காற்று, புன்மைகள் அத்தனையும்
சேதித்துக் காக்கும் தினம்.                               88

தினமும் கணமும் சிறுமணிப் போதும்
உனதசை வின்றெனில் உண்டோ- தினமும் நீ
ஆடும் அசைவில் அனைத்தும்  இயங்கிட
ஓடுமே இந்த உலகு.                                    89

உலகத்து நாயகியே , ஓங்காரி மாரி
அலைகடல் சூழ்பாரின் அம்மே-சலனத்தி
ஆடும் பிரானய்யன் அம்பலவன் தேவியுனைப்
பாடும் பணியே பணி.                                   90

பணிந்துன்னைப் போற்றிநிதம் பாராட்டி வாழ்த்த
அணிவகுப்பார் விண்ணோர்கள் , ஆனால்தணியாத
அன்பினால் எம்மையும் ஆட்கொள்ள நீவந்த
தன்மையே ஆகா தனி.                          91

தனித்த பரம்பொருட் சக்தியை, நாமத்து
இனித்திடும் செஞ்சொல் எழிலை- நினைத்தவரை
அஞ்சேல் எனக்காக்கும் ஆதியைப் போற்றிடும்
நெஞ்சினுக் கேது நிகர்.                          92

நிகரில்லை என்றே நிமிர்ந்த அரக்கப்
பகையினை மாய்த்த பரிவே- பகர்கின்ற
சொல்லெல்லாம் நின்னருட் சூத்திரத் தாடிடும்
வல்லமை யன்றோ வளம்.                              93

வளம்தரும் நேர்மை வழிதரும், நல்ல
உளந்தரும், தெய்வ உணர்வுக்களம்தரும்
காணும் விதந்தரும் காளி பதந்தினம்
பூணுவோம் நெஞ்சிற் பொறித்து.                 94

பொறிவண்டு தேனுண்ட பூரிப்பால் பாடும்
செறிவுண்ட வேற்காட்டில் தேவி- குறிகொண்டு
வாழ வழிகாட்டும் வாய்மையினைக் காணுகையில்
வீழுமே தீய வினை.                                    95

வினைக்குத் தலைவியே, வேத முதலே
நினைக்கும் உளத்து நிமிர்வே- முனைப்பாய்க்
கலியிடர் தீர்த்தெமைக் காத்திட வந்த
பொலிவேநின் தாளே புகல்                              96

புகலேதும் இல்லாது போந்தார்க்கு நல்ல
புகலாக நிற்கின்ற பொன்னே- அகலேன்யான்
பூட்டினேன் நெஞ்சிற் புனிதமே,எந்நாளும்
காட்டுவேன் நின்பாதக் கற்பு.                            97

கற்பூர நாயகியே, காளி, மகமாயி
பொற்பூரும் நின்பாதம் போற்றுகிறேன் -அற்புதங்கள்
ஆக்குகிற வேற்காட் டரசியே  , என்றென்றும்
காக்க எமையும் கழல்.                          98

கழல்கண்டேன், கார்போல் குழல் கண்டேன், சுற்றும்
தழல்கண்டேன், தார்கண்டேன் தங்க- நிழல்கண்டேன்
கண்கண்டேன், வேற்காட்டுக் காளி கருமாரி
பெண்கண்டேன், என்னே என் பேறு.                      99

பேறிதுபோல் வேறு பெற உளதோ, நீகூட்டும்
நீறிதுபோல் வேறு நெறியுண்டோ- கூறுபுகழ்க்
கண்ணியமே, எங்கள் கருமாரி, தண்ணொளிசேர்
புண்ணியமே எந்நெஞ்சில் பொங்கு.                      100

நூற்பயன்

எண்ணம் சிறக்கும், இனிமை பெருகிவரும்
திண்ணம் நலம்பெருகும், தேர்ச்சிவரும்- எண்ணிக்
கருமாரி அந்தாதி கற்றுளம் கொள்ள
வருமாரி யாக வளம்.






No comments:

Post a Comment