உனையே குருவாக்கு
பல்லவி
வீணையில் விளையாடும் கலைமகளே-என்மன
வீணையில் இசைபாட நீயருளே! - அம்மா
அனுபல்லவி
ஏணியைக் கொண்டுவந்து
ஏற்றியே வைத்துவிட்டு
வீணையைக் கைகொடுத்து
வித்தையை ஏன்மறைத்தாய்? (வீணையில்...)
சரணம்
பாடும் குயில்குரலில் பண்ணாய்
இழைபவளே
பாவலர் நெஞ்சத்தில் என்றும்
தழைப்பவளே
ஏடும் எழுத்தும்தந்து எழுத
அழைப்பவளே
இலக்கியம் என்கின்ற வயலில்
உழைப்பவளே
(வீணையில்..)
என்னைப் பணிகொண்டே ஏவல்
புரிந்தாயே
என்னுள் புதுப்புதிதாய்
தந்து பரிந்தாயே
இன்னல் வருகையிலே காக்க
விரைந்தாயே
எங்கேநான் சென்றாலும் அங்கே
இருந்தாயே!
(வீணையில்..)
ஊற்றை அடைக்காதே, ஏற்றம் தடுக்காதே
ஆற்றல் பொடிக்காதே போற்றல்
முடக்காதே
தேற்றம் துடைக்காதே தெம்பை
நொடிக்காதே
ஏற்றாய், அடிக்காதே, இன்னல் கொடுக்காதே
(வீணையில்,,)
புதுமை வரவாக்கு, போதம் விரிவாக்கு
விதியைச் சரியாக்கு, வித்தை உருவாக்கு
இதமே எனதாக்கு, எண்ணம் கருவாக்கு
பதமே பணிகின்றேன் உனையே
குருவாக்கு!
(வீணையில்..)
No comments:
Post a Comment