Saturday, May 11, 2019

இன்று மறந்தனையோ?


இன்று மறந்தனையோ?

சிந்து

இன்று மறந்தனையோ - அடி
        என்னைத் துறந்தனையோ?
அன்று நினைத்தவுடன்
        ஆகம் நிறைத்தவளே
                      
                       இன்று மறந்தனையோ- அடி
                          என்னைத் துறந்தனையோ

பாலத்தடியினிலே              
   பாவி எனைத்தழுவி
நாலு கவிதைகளை
   நல்கி உயிர்த்தவளே

ஒன்றும் நினைவிலையோ?-அந்த
ஊற்றம் இனியிலையோ
என்றும் உனதுயிர்நான்
என்று மொழிந்தவளே
                        ஒன்றும் நினைவிலையோ-அந்த
                         ஊற்றம் இனியிலையோ

ஆல மரநிழலில்
  ஆதிக் கதையெழுதி
நீல விசும்பளந்து
  நெஞ்சு கலந்தவளே

பெண்ணே அதுகனவோ- அடி
பேசியதும் புனைவோ
கண்ணுள் ஒளியெனவே
காட்சி கொடுத்தவளே
                       பெண்ணே அதுகனவோ-அடி
                         பேசியதும் புனைவோ?
                                               
தூங்க விடாதெனையே
   தொல்லைச் சுகங்கொடுத்து
நீங்கல் எனும்பதத்தை
   நெம்பித் தொலைத்தவளே   


ஓடி ஒளிந்தனையோ?-அடி
ஊக்கம் தளர்ந்தனையோ
ஏடு தனைநிறைக்கும்
எண்ணக் களஞ்சியமே
                              ஓடி ஒளிந்தனையோ-அடி
                                  ஊக்கம் தளர்ந்தனையோ?
எண்ணம் இளமையடி
   என்றும் வளமையடி
கண்ணிலே ஈரமடி
   காலச்சஞ் சாரமடி

No comments:

Post a Comment