Monday, May 13, 2019

காயத்ரி பதிகம்


காயத்ரி பதிகம்

"ஒவ்வொரு தெய்வத் திற்கும்
       உள்ளன மந்தி ரங்கள்
அவ்விதம் ஜபங்கள் செய்ய
       அவையவை நன்மை செய்யும்
எவ்வகைத் தெய்வமும் தான்
       ஏற்கிற வண்ணம் இங்கே
செவ்விய மந்த்ரம்  ஒன்று
       செப்பிட வேண்டுகின்றேன்"                1

நாரத முனிவர் கேட்க
       நவின்றனர் திருமால்" ஆமாம்
சீரிய மந்த்ரம், எந்தத்
       தெய்வமும் ஏற்கும் மந்த்ரம்
காரிய சித்தி நல்கும்
       காயத்ரி மந்த்ரம் ஒன்றே
ஓரிரு மூன்று நான்கிற்(கு)
       ஒப்பிலை உண்மை, உண்மை"                    2

காயத்ரி வேத மூலம்
       காயத்ரி ஒளியின் வெள்ளம்
காயத்ரி ஞான மார்க்கம்
       காயத்ரி கருணை ஊற்று
காயத்ரி அகத்தின் ஜோதி
       காயத்ரி ஆன்ம வேதி
காயத்ரி தெய்வ வாக்கு
       காயத்ரிக்கிணை காயத்ரி                  3

தனிவழி செல்ல வேண்டின்
       தடைகளை நீக்க வேண்டின்
இனியொரு வழியே இல்லை
       எனுமிடர் போக்க  வேண்டின்
குனிகிற நிலைமை மாறிக்
       கோபுர மாக வேண்டின்
நினைவிலே காயத் ரீயை
       நிறுவுக , அதுவே போதும்                 4





நீறினைக் கையெ டுத்து
       நெஞ்சிலே காயத் ரீயைச்
சீருர நிறுத்திக் கொண்டு
       ஜெபித்ததைப் பூசிக் கொண்டால்
வேரறப் பில்லி சூன்யம்
       வீழ்ந்திடும், பேசும் பேச்சில்
வீரியம் கூடும், அச்சம்
       விலகிடும், துணிவு சேரும்                5

யாரிதைச் செபிக்கின்றாரோ
       அவருக்கு மட்டுமின்றி
ஊரிலே உள்ளோருக்கும்
       உறவுக்கும், தேசத்திற்கும்
பாரிலே உள்ளோருக்கும்
       பலன்களைக் கொடுக்கு மென்று
நேரிய சாத்தி ரங்கள்
       நிச்சய மாகச் சொல்லும்                         6

காயத்ரி உபதே சத்தைக்
       கடமையாய்ப் பெற்ற பேர்கள்
போயெத்தைச் செய்த போகும்
       பொருந்தும் இம்மந்திரத்தில்
தோயவே மறந்து விட்டால்
       தூய்மையும் குலமும் நீங்கும்
ஆயநற் பொக்கிஷத்தை
       அலட்சியப் படுத்த லாமா?                 7

காலையில் உச்சிப் போதில்
       கதிரவன் கீழே செல்லும்
மாலையில் காயத்ரீயை
       வகையுடன் ஜபித்து வந்தால்
மூலமாம் ஜோதி மெல்ல
       முகிழ்த்திடும், மேலே செல்லும்
ஞாலமும் இனிய தாகும்
       நம்முளே சாந்தி பூக்கும்                   8

எதையிதைக் காக்க வென்றே
       எதையுமே சொல்ல வேண்டாம்
அதுவது  தத்த  மக்கே
       அமைந்திடும் ஒழுங்கில் செல்ல உதவிடும் அன்னை மந்த்ரம்
       "உன்பதம் சரணம்"  என்னும்
பதங்களைச் சொல்லி மந்த்ரம்
       பாவித்தால் அதுவே போதும்!              9

வதனங்கள் ஐந்தும் நம்மை
       வாழ்கெனச் சொல்லும். எங்கும்
முதனிலை வகிக்கும் பேறு
       முந்திடும், கோள்கள் எல்லாம்
அதனதன் தீய போக்கை
       அடக்கியே சுருட்டிக் கொள்ளும்
எதனையும் விஞ்சி நிற்கும்
       இனியகா யத்ரி போற்றி!            10

No comments:

Post a Comment